Sunday, January 05, 2014

எஸ்.ரா - சென்ஷி - காப்புரிமை

"எஸ்.ரா தேர்வு செய்த 100 தமிழ்ச் சிறுகதைகள்" விவகாரத்தில் எனது கருத்து.

http://abedheen.wordpress.com/2014/01/04/sram100/#comment-2977

இங்கு அனைவருமே ஒரு விஷயத்தை தெரிந்தே மறந்து விடுகின்றோம். காப்புரிமை.

சென்ஷி அவர்கள் எத்தனை எழுத்தாளர்களிடம் அனுமதி பெற்று, அவர்களது படைப்புகளை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்?

எத்தனை பதிப்பகங்களிடம் பேசி, அவர்கள் வெளியிட்ட நூல்களின் பகுதிகளை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்?

எழுத்தாளர்களின், பதிப்பகங்களின் காப்புரிமையை துணிவாக மீறுகிறார். கதைகளின் மூலப்புத்தகம், பதிப்பாளர், தொகுப்பாளர் பற்றிய விவரங்களை தருவதில்லை.

‘நான் உங்கள் அனைவரின் பொருட்களையும் உங்கள் அனுமதியின்றி எடுத்து பிறருக்கு தருகிறேன். நீங்கள் ஆட்சேபித்தால், உங்கள் பொருட்களை உங்களுக்கே திருப்பித் தருகிறேன்.’ என்ற அறிவிப்பு சரியானதா என்ன?

இன்னும் சில ஆண்டுகளில், சென்ஷி அவர்கள், ஊரில் உள்ள எழுத்தாளர்கள் அனைவரின் எல்லா படைப்புகளையும், அனுமதி இன்றி, பலரது உதவியுடன் மின்னாக்கம் செய்து, இணைய தளங்களில் வெளியிடுவார். எல்லா எழுத்தாளர்களின் எல்லா படைப்புகளும் அங்கே இருக்கும்.

எஸ்.ரா அவர்கள் தாம் படித்த ஓராயிரம் படைப்புகளில், தமக்குப் பிடித்த 100 படைப்புகளை பட்டியலிட்டு, அவற்றை எழுதியவர்களின் அனுமதி பெற்று, அச்சு நூலாக வெளியிட விரும்புகிறார். ( பதிப்பாளர் வேடியப்பன் அவர்கள் கூற்றுப்படி, எழுதியவர்களின் அனுமதி பெறப்பட்டுறள்ளது.)

இந்த 100 படைப்புகளும் சென்ஷி அவர்கள் தமது தளத்தில் வெளியிட்டுருப்பதால், அவரா தொகுப்பாளர்? இனி தமிழில் வரப்போகும் எல்லா தொகுப்பு நூல்களுக்கும் அவரா நிரந்தர தொகுப்பாளர்?

காப்புரிமை மீறலுக்கு இப்படி ஒரு நிரந்தர பதவியா? சபாஷ்

நான் எனக்குப் பிடித்த 100 திருக்குறள்களை மட்டும் வெளியிட்டால், தொகுப்பாளர் நானே.
1330 திருக்குறள்களையும் வைத்துள்ள Project Madurai திட்டக்குழு அல்ல.

சென்ஷி அவர்கள் குழுவின் உழைப்பு மிகவும் பெரிது. ஆனால், காப்புரிமையை சிறிதும் மதிக்காமல், குழுவில் உள்ள அனைவருமே காப்புரிமை மீறலுக்கு உதவுவது வருத்தமே.

பல பேர் சேர்ந்து, மிகவும் கஷ்டப் பட்டு, 4-5 வருடங்கள் உழைத்து, ஆனால் யாரையும் கேட்காமல், காப்புரிமை பெற்ற படைப்புகளை, தொகுத்து வெளியிடுதல், காப்புரிமை சட்டப்படி குற்றமே.

பலரது, பல வருட உழைப்பு என்பதால் மட்டுமே, தவறான செயலை ஏற்றுக் கொள்ளலாகாது.

அச்சு நூலோ, மின்னூலோ, இணையப் பதிப்போ, மூல ஆசிரியரிடம் அனுமதி பெற்று வெளியிடுங்கள்.

பிறகு தொடருங்கள், தொகுப்பாசிரியர் பதவி பற்றிய விவாதங்களை.

ஒரு வேண்டுகோள்;
உங்கள் படைப்புகளை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடுங்கள். இது அனைவருக்கும் படைப்புகளை பகிரும் உரிமையை அளிக்கிறது. மூல ஆசிரியர் விவரங்களைத் தந்து, யாரும் பகிரலாம். தொகுக்கலாம். வெளியிடலாம்.

நன்றி

ஸ்ரீனிவாசன்

tshrinivasan AT gmail DOT com

http://FreeTamilEbooks.com

எங்களைப் பற்றி http://freetamilebooks.com/about-the-project/

No comments: