Tuesday, March 03, 2015

இணையத்தில் சிறுவர் நாடகங்களின் தேவை


உலகெங்கும் வாழும் தமிழர்கள், அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு செல்ல,
மிகவும் முயற்சி செய்கின்றனர்.

பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள் முழு வீச்சில்
செயல்பட்டு, தமிழ் கற்பித்தல், இசை, பாடல், நாட்டியம் கற்பித்தல்,
நண்பர்களாக, குடும்பங்களாக அடிக்கடி சந்தித்து பேசுதல்,
பாடல், ஆடல், பேச்சுப் போட்டிகள் நடத்துதல்,
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் பண்டிகைகளை இணைந்து கொண்டாடுதல்
என பல்வேறு வகைகளில், தமிழை வாழ வைக்கின்றனர்.

அவ்வப்போது, தமிழ் பிரபலங்களையும் அழைத்து வந்து
இசை, திரையிசை, பட்டிமன்றம், சிறப்புரை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்.


தமது குழந்தைகளை தமிழ் கற்க ஊக்கப்படுத்தவும்,,
அவர்களின்  திறமையை வெளிக்காட்டவும் , இசை, பாடல், நாட்டியம், நாடகம்
போன்றவற்றில் பயிற்சி தந்து, இது போன்ற நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தச் செய்கின்றனர்.

திரைப் பாடல்களூம், இசையும் இணையத்தில் நிறைய கிடைப்பதால்
அவையே முக்கிய நிகழ்ச்சிகளாக உள்ளன.

ஒரு குழுவாக, பல சிறுவர்களும் இணைந்து, நடிக்கக்கூடிய நாடகங்களுக்கு
பெரும் வரவேற்பு கிடைக்கின்றன.

தமிழ் கற்கும் வாய்ப்பு பெரும்பாலும் வாரத்திற்கு ஓரிரு நாட்களும், ஓரிரு மணி நேரங்களே கிடைக்கும் இந்த குழந்தைகளை, மேடையேறி சிறு வசனங்களை சொல்லச் செய்வதே பெரும் பணியாக இருக்கும்.


இந்தக் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க, சிறுவர் நாடகங்கள் இணையத்தில் கிடைப்பதில்லை.

http://www.noolaham.net/project/02/120/120.htm
http://tamilaram.blogspot.co.uk/2011/05/kids-play.html

இவை இரண்டு மட்டுமே இணையத்தில் உள்ளன.


தமிழ்நாட்டில் மட்டுமே அச்சு நூல்கள் சில கிடைக்கின்றன.
அவை வெளிநாட்டு தமிழர்களை சென்றடைவது கடினமே.

இதனால், வெளிநாட்டு தமிழ் ஆசிரியர்களோ, பெற்றோரோ தான்
நாடகங்களுக்கு மூலக்கரு, வசனங்கள் எழுத வேண்டியுள்ளது.

இது பலருக்கு எளிதான வேலை அல்ல.

இது போன்ற நாடகங்கள் இணையத்தில் உரை வடிவில் கிடைத்தால்,
அவர்கள் எளிதில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இயலும்.

சிறுவர்களுக்கு எழுதும் எழுத்தாளர்கள் அதிகரித்து வரும் இந்த வேளையில்
சிறுவர் நாடங்கங்களையும் எழுத வேண்டுகிறேன்.

புதிதாக எழுத வேண்டியது கூட இல்லை.
ஏற்கெனவே குழந்தைகளுக்காக நிறைய நீதிக் கதைகள்,நகைச்சுவைக் கதைகள்,
தெனாலிராமன், அக்பர், பீர்பல், முல்லா, விக்கிரமாதித்யன், பரமார்த்த குரு போன்ற கதைகள் உள்ளன.


http://chirukathaikal.blogspot.co.uk
http://www.tamilsirukathaigal.com/search/label/Moral%20Story

இங்கு பல சிறுவர் கதைகள் கிடைக்கின்றன.
அவற்றை எளிய சிறு, குறு நாடக வடிவில் எழுதி இணையத்தில் வெளியிட்டாலே போதும்.

அவற்றை உலகெங்கும் உள்ள தமிழர்கள் தேவைக்கேற்றபடி, சிறு மாற்றங்கள் செய்து தம் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செய்வர்.


இதை தமிழ் எழுத்தாளர்களும், வலைப் பதிவர்களும், நட்பு ஊடக எழுத்தாளர்களும்
தனியே எழுதி வலைப் பதிவுகளில் வெளியிடலாம்.
அல்லது ஒரு குழுவாக ஒரு இடத்தில் சந்தித்து, எழுத்துத் திருவிழா நடத்தி,
எழுதி வெளியிடலாம்.

இவ்வாறு எழுதும் அன்பர்கள் தயவுசெய்து வலைப்பதிவில் வெளியிடுங்கள்.
முகநூல், டுவிட்லாங்கரில் எழுதும் எழுத்துக்கள் இணைய தேடுதலில் கிடைப்பதில்லை.

தமிழை அடுத்த தலைழுறைக்கு எடுத்துச் செல்ல, நம்மால் ஆன முயற்சிகளைச் செய்வோமே!

மிக்க நன்றி!

No comments: