Thursday, December 22, 2016

டயஸ்போராவிற்கு உங்களை வரவேற்கிறோம்

இணைய உலகில் எண்ணற்ற சமூக வலைத்தளங்கள் நாள்தோறும் பெருகி வருகின்றன. மக்களும் கிடைக்கும் அனைத்து வழிகளிலும் தமது எண்ணங்களையும் படைப்புகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

மின்னஞ்சல் குழுக்கள், வலைப்பதிவுகள், டுவிட்டர், டுவிட்லாங்கர், முகநூல், மீடியம், டம்ளர் எனப் பல்வேறு தளங்கள் நம் எண்ணங்களைப் பகிர உதவுகின்றன.

இவற்றுள் முகநூல் ஆரம்பம் முதல் பல்வேறு வசதிகளை அளித்து, சமூக வலைத்தளங்களில் முதல் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சிகளில் முகநூல் நிறுவனம் உருவாக்கும் சிக்கல்கள் ஏராளம். நமது தகவல்களைப் பிற நிறுவனங்களுக்கு விற்பது, Free Basics போன்ற திட்டங்களால் இணையச் சமநிலையைக் குலைப்பது போன்ற பல செயல்களை செய்கிறது முகநூல் நிறுவனம்.

மென்பொருள் உலகின் எல்லாத் தேவைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு காணும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் முகநூலின் ஆதிக்கத்தில் இருந்து மக்கள் அனைவரையும் விடுவிக்க முடிவு செய்து, டயஸ்போரா என்ற கட்டற்ற சமூக வலைத்தள மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.

நமது தகவல்கள் நமக்கே சொந்தம்.

இந்த டயஸ்போரா மென்பொருள் தனி ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானதல்ல. இது ஒரு கட்டற்ற மென்பொருள். இதை யாரும் இலவசமாகப் பதிவிறக்கலாம். மாற்றங்கள் செய்யலாம். யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். நமது வீட்டுக் கணினியில், நமது சர்வரில் என எங்கும் நிறுவிக் கொள்ளலாம். நமது சர்வர் மூலம் நாம் பகிரும் தகவல்கள் நம்மிடம் மட்டுமே இருக்கும். வேறு யாரும் அவற்றை சொந்தம் கொண்டாட இயலாது.
முகநூல் அப்படி அல்ல. முகநூலில் நாம் பகிரும் தகவல்களும், புகைப்படங்களும், காணொளிகளும் முகநூல் நிறுவனத்திற்குச் சொந்தமானவை. எப்போது நினைத்தாலும் முகநூல் நிறுவனம் நமது ஆக்கங்களை நீக்கிவிடும்.

பரவலான மென்பொருள்

முகநூல் அதன் நிறுவனத்தின் சர்வர்களில் மட்டுமே நிறுவப் பட்டுள்ளது. டயஸ்போரா உலகெங்கிலும் உள்ள சர்வர்களில் நிறுவப்பட்டு பராமரிக்கப் படுகிறது. இவை pod எனப்படுகின்றன. இணையத்தில் எங்கு நிறுவப்பட்டாலும் இந்த pod கள் பிற pod களை தாமே கண்டறிந்து அவற்றுடன் இணைந்து ஒரே மென்பொருள் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன.

இதனால் உங்கள் சொந்த pod, உங்கள் நண்பர்களின் pod, அல்லது இணையத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான pod களில் ஏதோ ஒன்று வழியாக இணைந்து உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

முழு சுதந்திரம்

சில சமூக வலைத்தளங்கள் உங்கள் கைபேசி எண்ணைக் கேட்டு உங்களை அடையாளப்படுத்துகின்றன. டயஸ்போராவில் இது போன்ற சிக்கல்கள் இல்லை. நீங்கள் முழுமையாக அடையாளம் காண இயலாதவாறு கூட உங்களை மறைத்துக் கொண்டு இயங்க முடியும்.

சிறப்புகள்.

1. பகிர்தல்
யார்யாருடன் உங்கள் ஆக்கங்களைப் பகிர்வது என்பது உங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்.
2. #குறிச்சொற்கள்
# என்று ஒரு வார்த்தைக்கு முன் எழுதி அதைக் குறிச்சொல்லாக்கலாம். அதைக் கொண்டு தேடுவது மிக எளிது.
3. விருப்பம், பகிர்வு
பிறர் ஆக்கங்களை விரும்பலாம். பகிரலாம்.
4. @பெயர்
நண்பரின் பெயர் முன் @ சேர்த்து அவரை உரையாடலில் குறிப்பிடலாம். இது அவருக்கு அறிவிக்கப்படும்.
5. பிற சமூக வலைத்தளங்களுடன் இணைப்பு
நீங்கள் டயஸ்போராவில் எழுதுபவை பிற சமூக வலைத்தளங்களைப் போய் சேர ஏற்பாடு செய்யலாம். இதனால் உங்கள் ஆக்கங்கள் அங்கு உள்ளவர்களையும் சென்றடையும்.
6. அரட்டை
XMPP என்ற protocol மூலம் எந்த ஒரு அரட்டை மென்பொருள் வழியாகவும் டயஸ்போரா நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்.
7. கைபேசி
கைபேசியின் உலாவியில் எளிதாக அணுகலாம். செயலிகளும் உருவீக்கப்பட்டு வருகின்றன.
8. மொழியாக்கம்
கட்டற்ற மென்பொருள் என்பதால் உலகின் எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்து விடலாம்.
9. தொடர்ந்த மேம்பாடுகள்
Ruby On Rails என்ற நிரலாக்க மொழிக் கட்டமைப்பைக் கொண்டு உருவீக்கப் பட்டுள்ளது டயஸ்போரா. உலகெங்கும் உள்ள ரூபி நிரலாளர்கள் இணைந்து தொடர்ந்து புது வசதிகளை அளித்து வருகின்றனர்.

வாருங்கள். டயஸ்போராவில் பேசுவோம்.

உங்களுக்கு விருப்பமான டயஸ்போரா pod ஐத் தேர்ந்தெடுக்க இங்கு செல்க. அதில் ஒரு கணக்கு உருவாக்கி, பிற நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து, அழைக்கவும்.
மென்பொருள் உலகில் நமக்கு விடுதலை அளிக்கும் கட்டற்ற மென்பொருட்களுக்கு யாவரும் எளிதில் தரக்கூடிய பங்களிப்பு, அவற்றைப் பயன்படுத்துவதுதான்.
வாருங்கள். டயஸ்போராவில் பேசுவோம்.

நான் பயன்படுத்தும் pod : http://diasp.in
எனது டயஸ்போரா கணக்கு : tshrinivasan@diasp.in

சில முக்கிய இணைப்புகள்.
https://joindiaspora.com/
https://podupti.me/
https://wiki.diasporafoundation.org/Choosing_a_pod

கைபேசி கூட இல்லாத ஒரு நிறுவனத் தலைவர் – ஸ்டீவ் ஹில்டன்

ஆங்கில மூலம் – https://www.theguardian.com/technology/2016/jan/11/steve-hilton-silicon-valley-no-cellphone-technology-apps-uber

நான் ஸ்டீவ் ஹில்டன். மேலே படிக்கும் முன் ஒன்றை நம்புங்கள். நான் உங்களை மாற்ற முயலவில்லை. உங்களுக்கு போதனை தரவோ, குறைகூறவோ போவதில்லை. சில நேரங்களில் அப்படித் தோன்றினால் மன்னிக்கவும். எனது நோக்கம் அதுவல்ல. எனது செயல்கள் பற்றியே பேசப் போகிறேன்.

சில காலம் முன் நான் இங்கிலாந்துப் பிரதமருக்கு அரசின் கொள்கைகளுக்கான ஆலோசகராக இருந்தேன். இப்போது ஒரு கணினி துளிர் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதுவே பலருக்கு வியப்பு. பள்ளி, கல்லூரி நாட்களில் புத்தகம் படிப்பதையே வெறுத்த நான், இப்போது ஒரு புத்தகத்தை எழுதியுள்ளேன் என்பது கூடுதல் வியப்புதானே.

இவற்றை விட பலரும், ஏன், எல்லோருமே நம்ப முடியாமல் வியக்கும் செய்தி ஒன்று உண்டு. ஆம். என்னிடம் கைபேசி இல்லை. ஸ்மார்ட் போனைச் சொல்லவில்லை. சாதாரண எண்களைக் கொண்ட பழங்காலக் கைபேசி கூட இல்லை. எந்த விதமான கைபேசியையும் நான் பயன்படுத்துவதில்லை. என்ன? பிறகு எப்படி என்னிடம் பேசுவதா? என்னிடம்தான் தொலைபேசி (landline) இருக்கிறதே. எந்தக் கைபேசியில் இருந்தும் அதற்கு அழைக்கலாமே. வீட்டிலும் அலுவலகத்திலும் தொலைபேசி உள்ளது. இது போதுமே.
இதைப்பற்றிக் கேள்விப்படும் பலரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பது எனக்குப் பழகி விட்டது. ‘நீர் எப்படி ஐயா வாழ்கிறீர்?’ என்பதே பலரது கேள்வி. ‘அது சரி. உங்கள் மனைவி எப்படி உங்களோடு வாழ்கிறார்?’ இது பலரது வியப்பு. அவரைப் பற்றி பிறகு சொல்கிறேன்.
இந்த நவீன உலகில், தொழில் நுட்பங்களின் கோட்டையான சிலிக்கான் வேலியில் எப்படி ஒரு மனிதன் கைபேசி இல்லாமல் வாழ முடியும்?

நான் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கைபேசி இல்லாமல் வாழ்ந்து வருகிறேன். எனது அனுபவங்களைப் பற்றி பலரும் கேட்கின்றனர்.

இதோ எனது கதை.

2012. இங்கிலாந்து. என் மனைவி ரேச்சல் கூகுள் நிறுவனத்தில் முக்கியப் பதவியில் இருந்தார். கடும் வேலை அவரைக் கசக்கிப் பிழிந்தது. நான் இங்கிலாந்துப் பிரதமருக்கு அரசின் கொள்கை ஆலோசகராக இரண்டு ஆண்டுகள் வேலை செய்து வந்தேன். அரசு எந்திரத்துடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. வேலை கசந்துபோன நானும் மனைவியும் இரு மகன்களுடன் வேறு நாடு போக முடிவு செய்தோம். கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ கடற்கரைப் பகுதிக்கு நாடு மாறிப் போனோம்.

அப்போது இங்கிலாந்து அரசு தந்த கைபேசி வைத்திருந்தேன். அது ஒரு சாதாரண நோக்கியா கைபேசி. நான் எப்போதும் எந்த ஸ்மார்ட் போனையும் பயன்படுத்தியதில்லை. எல்லா நேரமும் அலுவலக மின்னஞ்சல்கள் என்னைப் பின் தொடர்வது எனக்குப் பிடிக்காது.
அந்த போனும் கலிபோர்னியா வந்தபின் வேலை செய்யவில்லை. எனவே அதே போன்ற பழங்காலக் கைபேசியைத் தேடி அலைந்தேன். எந்தக் கடையிலும் சாதாரணக் கைபேசி விற்கப் படுவதே இல்லை என்பதை அறிந்து வியந்தேன். ஒரு வழியாக eBay வழியே கிடைத்தது. சிறிது காலம் பயன்படுத்தினாலும் அடிக்கடி சிக்கல் வந்தது. சரி செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை. ஒரு நாள் மாலை, கடற்கரையில் அதன் சார்ஜ் போடும் துளையில் மணல் அடைத்துக் கொண்டது. ‘அவ்வளவுதான். இனி இது வேலை செய்யாது. போதும் கைபேசியின் தேடல். கைபேசி இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்? வாழ்க்கை முடிந்து விடுமா என்ன? ‘ என்று யோசித்தபடியே அந்தக் கடைசி கைபேசியையும் குப்பைத்தொட்டியில் அடக்கம் செய்தேன்.

அது என் வாழ்க்கையின் மிக முடிவு என்பதை அப்போது அறியவில்லை. ஒரு வார காலம் நன்றாகவே போனது. நடைபயணம், சைக்கிள், பேருந்து என பயணங்கள் எந்த இடையூறும் இன்றி இனிமையாகவே இருந்தன. மிகமிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன். மிக ஓய்வாகவும் செயல்களில் முழு கவனத்தோடும் இருப்பதை உணர்ந்தேன். கலிபோர்னியாவுக்கு மாறியதே பெரிய மாற்றம் என நினைத்திருந்தேன். ஆனால் இதுவே என் வாழ்வை மாற்றிய முக்கிய செயல் ஆனது.

‘ஒருவேளை விரைவில் கைபேசி வாங்க நேரிடலாம். ஆனால் முடிந்தவரை தள்ளிப் போடுவோமே.’ என்று உறுதியோடு இருந்தேன். அப்போது செப்டம்பர் 2012. இன்று வரை அதே உறுதியோடு வாழ முடிகிறது.

என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி இது. ‘மக்கள் எப்படி உங்களைத் தொடர்பு கொள்கிறார்கள்?’

‘மின்னஞ்சல்.’ நான் ஒன்றும் காட்டுக்கு ஓடிப் போய்விடவில்லையே. என்னிடம் மடிக்கணினி உள்ளது. இணைய இணைப்பும் தான். தினமும் அதில்தான் வேலை செய்கிறேன். பயணங்களிலும் கொண்டு செல்கிறேன். விமான நிலையங்களிலும் மின்னஞ்சல் பார்த்து வருகிறேன்.

எந்தச் சிக்கலும் இன்றி வியாபாரச் சந்திப்புகளையும் நடத்தி வருகிறேன். காலையில் நியூயார்க். மாலையில் வாஷிங்டன் டிசி என்று கூட வாடிக்கையாளர் சந்திப்புகள் நடத்துகிறேன். கடைசி நிமிட மாறுதல்கள், காலதாமத அறிவிப்புகள் கூட மின்னஞ்சல் வழியே அனுப்புகிறேன். பெறுகிறேன்.

‘உங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆகிறது என்றால் என்ன செய்வீர்கள்?’ இதுவே பலரும் அக்கறையுடன் கேட்கும் கேள்வி. 8, 4 வயது மகன்கள். பொறுப்பான பிள்ளைகள். எனது நேரத்தை அவர்களுடன் முழுமையாகக் கழிக்கிறேன். அவர்களை மிகவும் நேசிக்கிறேன். அதற்காக அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டுமா என்ன? அவர்களுக்கு ஏதாவது ஆகிறது எனில் யாராவது மனிதர்கள் அருகில் இருப்பர். நம் பெற்றோர்கள் எப்படி நம்மை வளர்த்தார்கள்? நாம் கைபேசியுடன் வளரவில்லையே. அட. இருபது ஆண்டுகள் முன்பு வரை மனித வரலாற்றிலேயே கைபேசி இல்லையே.

அடுத்து எனது துளிர் நிறுவனம். ‘எப்படி கைபேசி இல்லாமல் ஒரு நிறுவனத்தை நடத்த முடியும்?’ ‘அட. அங்கும் தொலைபேசி உள்ளதே.’ எமது நிறுவன வலைத்தளங்களும் செயலிகளும் கைபேசியில் எப்படி செயல்படுகின்றன என்பதை பிறரது கைபேசியில் காட்டச் சொல்லி அறிகிறேன்.

இந்த மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு சந்திப்புதான் சிக்கல் ஆனது. எனது காலதாமதம் பற்றி கடைசி நேரத்தில் அறிவிக்க இயலவில்லை. அது கஷ்டமாகத்தான் இருந்தது. அதைத் தவிர வேறு எந்தச் சிக்கலும் இதுவரை இல்லை.

என்னால் முடியாத சில விஷயங்களும் உள்ளன. பலருக்கும் தெரியும் பல செய்திகள் எனக்குத் தெரிவதே இல்லை. சமூக ஊடகத் தகவல்கள், கிசுகிசுக்கள், தட்ப வெப்பநிலை, பிரபலங்களின் வாழ்க்கை போன்றவற்றை நான் அறிவதே இல்லை. எப்போதும் கைபேசியைத் தடவிக் கொண்டே இருப்போருக்கு இவை எல்லாமே தெரிகிறது. ஆனால் அதற்காக அவர்கள் நாள் முழுதும் கைபேசியுடன் மட்டுமே செலவிடுகின்றனர்.
இன்னொரு சிக்கல். என்னால் உபர் டாக்ஸியைப் பெற முடிவதில்லை. உபர் டாக்ஸி சேவையைப் பெற அவர்கள் செயலி வழியாக மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்த ஊரில் பலருக்கும் அது தண்ணீர் போல அவசியமான ஒன்றாக உள்ளது. எனக்கு இல்லை. நான் எனது சைக்கிள், பேருந்து, ரயில் இவற்றை மட்டுமே பயன்படுத்துகிறேன். ஒருமுறை ஒரு இரவு விருந்து முடிந்து வெகு நேரமாகிப் போனதால் நண்பர் மூலமாக டாக்ஸி பதிவு செய்து அவரிடம் பணம் தந்து விட்டேன்.

நீங்கள் என் மனைவியிடம் பேசினால் இவ்வாறு கூறுவார் என நினைக்கிறேன். ‘ஸ்டீவ் ஒரு சுயநலவாதி. அவர் கைபேசி பயன்படுத்துவதில்லை. ஆனால் அவசரத் தேவைகளுக்கு பிறர் கைபேசிகளின் உதவியை எதிர்பார்ப்பார். முழு உலகமே அவரையே சுற்றுகிறது என்று நம்புகிறார். எல்லாமே திட்டமிட்டபடியே நடக்க வேண்டும் அவருக்கு. மாலை 4 மணிக்கு சந்திக்க வேண்டும் என முடிவு செய்தால், அவ்வாறே செய்தாக வேண்டும். கடைசி நேர மாறுதல்களைக் கூட அவரிடம் சொல்ல இயலாது. எப்படிச் சொல்வது? அவரிடம்தான் கைபேசி இல்லையே. இதனால் எனக்குப் பலநேரம் கோபம் வரும்.’

உண்மைதான். இது போன்ற சண்டைகள் அடிக்கடி எங்களுக்குள் நடக்கும். அவசரத் தேவைகளுக்கு பிறர் கைபேசிகளைப் பயன்படுத்துவது, அதுவும் ஓசியிலேயே, நல்லதில்லைதான். ஆனால் இது எப்போதுமே அல்ல. மாதத்தில் 4-5 முறைதான். எனது முடிவுகள் இது போன்ற சூழ்நிலைகளைத் தரும் என்பது நான் யூகித்ததுதான்.
மிக முக்கியமான கேள்வி இதோ. ‘உங்கள் சொந்த முடிவுகளுக்காக பிறரைக் கஷ்டப் படுத்துவது சரியா?’

‘திட்டமிட்டபடி நடப்பது சரிதானே. நாம் சொன்னபடி நடப்பதில் என்ன தவறு? ஒருவரை 4 மணிக்கு சந்திப்பதாய்ச் சொன்னால், 4 மணிக்கு அந்த இடத்தில் இருக்க வேண்டும் தானே? கடைசி நேர மாறுதல்கள் ஏன்? கைபேசியில் அறிவித்து விடலாம் என்பதால் நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்காமல், பிறரைக் காக்க வைப்பது மட்டும் சரியா? அது மட்டும் மரியாதையான செயலா? இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே காலதாமதமாகப் போயுள்ளேன். ஹோட்டல் பெயர் மீதான குழப்பத்தால் வேறு ஒரு இடத்திற்குப் போய்விட்டேன். வேறு எப்போதும் காலதாமதம் ஆனதே இல்லை.

இப்போதெல்லாம் பேசுவதற்குப் பதிலாக sms, WhatsApp, email போன்றவற்றையே பலரும் பயன்படுத்துகின்றனர். என்னை தொலைபேசியில் அழையுங்கள் என்று சொன்னால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள்.

பிறருடன் எப்போதும் தொனர்பிலேயே இருப்பது எனக்கு சரியாகப் படவில்லை. கைதிகளைக் கண்காணிக்க அவர்கள் உடலில் சிப் பொருத்துவது பற்றி கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாம் செய்வது என்ன? எப்போதும் யாரும் நம்மைத் தொடர்பு கொள்ளும் வகையில் நாமே நம்மை கைதிகளாக்கிக் கொண்டுள்ளோம். நம்முடன் நாம் பேச, வாசிக்க, யோசிக்க, தனிமையை, இசையை, இயற்கையை, நம் எண்ணங்களை அனுபவிக்க நமக்கு நேரமே இருப்பதில்லையே.

நான் பிரச்சாரம் செய்வதாகத் தோன்றலாம். ஆனால் நான் விளக்க விரும்புவது என்னவெனில் கைபேசி இல்லாமல் இருப்பது எனக்கு முழு சுதந்திரம் தந்துள்ளது. நான் தாமதமாகச் சென்ற அந்த வியாபாரச் சந்திப்புக்குப் பின், சக நிறுவனர் சொன்னார். ‘ஸ்டீவ். நீ ஒரு கைபேசி வாங்கியே ஆக வேண்டும்.’ அதைக் கேட்டு என் கண்கள் கலங்கி கண்ணீர் விட்டன. எனக்கு மீண்டும் கவலை மிகுந்த, அவசரமான, நிம்மதியற்ற வாழ்க்கை வந்துவிடுமோ என்று பயந்தேன். ஆனாலும் அவர் என் முடிவுகளைப் புரிந்து கொண்டார்.

என் கதையைக் கேட்கும் பலரின் பதில் இது. ‘நீங்கள் அற்புதமான வாழ்க்கை வாழ்கிறீர்கள். என்னாலும் இப்படி வாழ முடிந்தால், என் வாழ்க்கையும் மிக இனிதாக இருக்கும்.’
உங்களாலும் இப்படி வாழ முடியும். எல்லோராலும் முடியும். பல நூற்றாண்டுகளாக மனித இனம் கைபேசி இல்லாமல் வாழ முடிந்த போது, நம்மால் வாழ முடியாதா என்ன? சரியான திட்டமிடலும் ஒழுங்கும் மட்டுமே தேவை. தெளிவான பிற தொடர்பு வழிகளை அறிவித்து விட்டு, ஒரு வாரம் கைபேசி இல்லாமல் வாழ்ந்து பாருங்கள். விளைவுகளைப் பொறுத்து அதை நீட்டியுங்கள். உங்களையே நீங்கள் புதிதாகக் கண்டுபிடிப்பீர்கள்.

வாழ்த்துகள்.

உங்கள் அனுபவங்களை என்னிடம் பகிர நினைத்தால் மின்னஞ்சல் அனுப்புங்கள். அட. நான் டுவிட்டரில் கூட இருக்கிறேன். @stevehiltonx
Steve Hilton, crowd PAC நிறுவனத்தின் CEO. அவரது நூல் More human ஆகும்.

Tuesday, September 13, 2016

உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 - சில நினைவுகள்


செப் 9,10,11 2016 ல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்லில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 ல் கலந்து கொண்டேன். இம்முறை நித்யா, வியன், நான் என மூவரும் சென்றோம்.



நித்யாவும் நானும் இணைந்து பைதான் நிரலாக்க மொழி பற்றி பயிற்சி தந்தோம். நித்யா பயிற்சி தரும் முறை எளிமையாக இருந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்றனர். அது பணம் செலுத்தி கற்க வேண்டிய பயிற்சி. ஆயினும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தது மிக ஆச்சரியம். எல்லோரும் தனித்தனி கணினிகளில் பயில வேண்டி, பல மாணவர்களை மறுத்து விட்டோம். திண்டுக்கல் போன்ற ஊர்களிலும் பைதான் கற்கும் தாகம் உள்ளது மகிழ்ச்சி. இங்கு இன்னும் பல பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.

முதல் நாள் நிகழ்வில் ஓபன் தமிழ் Open-Tamil பைதான் நிரல் பற்றி பேசினேன். இதன் ஆக்குனர்  பாஸ்டன் முத்து. என் தம்பி அருளாளன் இதற்கு ஒரு எழுத்துரு மாற்றி எழுதியுள்ளார். நானும் சொற்பிழைத் திருத்தியில் பங்களிக்க முயன்று வருகிறேன். இதன் மூலம் வார்த்தை விளையாட்டுகளை உருவாக்கலாம். பலரும் இந்த விளையாட்டுகளை அறிந்து பாராட்டினர்.

பின் நுட்பங்கள் சார்ந்த அரங்குகளில் கலந்து கொண்டேன். எழுத்துணரி, சொற்பிழைத்திருத்தி, உரை ஒலி மாற்றி, எந்திர மொழிபெயர்ப்பு என பல நுட்பங்களில் உரைகள். Hidden Markov Model மூலம் உரை ஒலி மாற்றி செய்யலாம். இது பற்றி மேலும் ஆராய்ந்து ஓபன் தமிழில் சேர்க்க வேண்டும்.

முந்தைய மாநாட்டு உரைகள் போலவே, இதிலும் பலர் தாம் உருவாக்கிய மென்பொருட்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே தந்தனர். உள்ளார்ந்த நுட்பங்கள், சிக்கல்களைத் தீர்த்த விதங்கள் பற்றி அதிகம் பேசவில்லை. அவை எதுவும் கட்டற்ற மென்பொருள் இல்லை. எனவே அவற்றை நாம் பயன்படுத்தவோ, இணைந்து வளர்க்கவோ, பங்களிக்கவோ இயலாது. இது போன்ற மாநாடுகளில் மட்டுமே அவற்றைக் காணலாம். தமிழுக்குத் தேவையான அனைத்து மென்பொருட்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டு, மக்கள் பங்களிப்புக்கு வழங்கப்படாமல், அரசு மற்றும் பல்கலைக்கழக கிடங்குகளில் உறங்கிப் போவது வேதனையிலும் வேதனை. இதே நிலை தொடர்ந்தால், 100 ஆவது தமிழ் இணைய மாநாட்டிலும் இதே தலைப்புகளில்தான் ஆய்வுக் கட்டுரைகள் இருக்கும். அரசு உதவி பெற்று, மக்கள் வரிப்பணத்தில் உருவாகும் ஆய்வுகள், மென்பொருட்கள் அனைத்தும் கட்டற்ற மென்பொருட்களாக வெளிவர யாரைக் கேட்பது?  உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

மூன்றாம் நாளில், எந்திர மொழியாக்கம், உரை ஒலி மாற்றி பற்றிய நீண்ட பேருரைகள். எந்திர மொழியாக்கம் ஆய்வு நிலையில் உள்ளது. ஆனால் SSN கல்லூரிப் பேராசிரியர் திரு. நாகராஜன் உருவாக்கிய உரை ஒலி மாற்றி, தமிழை மிக இனிமையாகவே பேசுகிறது. பன்னெடுங்காலக் கனவு நனவாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. நனவு மீண்டும் கனவாகிப் போனது. ஆம். அந்த மென்பொருளும் மக்கள் பயனுக்கும் பங்களிப்புக்கும் இல்லையாம். அவர்கள் ஆய்வகத்தில் மட்டுமே இருக்குமாம். அதை கட்டற்ற மென்பொருளாக வெளியிட வேண்டினேன்.

காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் உத்தம அமைப்பிற்காக ஒரு இருக்கை அமைவது மகிழ்ச்சியான செய்தி. இதன் மூலம் தொடர் பயிற்சிகள், ஆய்வுகள் நடத்தலாம்.


ஆராய்ச்சிக் கட்டுரைகளை விட, மாணவர்களுக்கான பயிற்சியும், அரை நாள் அளவிலான நுட்ப பேருரைகள் மிக்க பயனளித்தன. இனி வரும் மாநாடுகளில் இவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.

உதயன், பத்ரி சேஷாத்ரி, துரை மணிகண்டன், செல்வமுரளி, இளந்தமிழ், முகிலன், தனேஷ் போன்ற நண்பர்களை சந்தித்தேன். அவர்களுடனான உரையாடல்கள் புது யோசனைகளையும், தமிழ்க்கணிமைக்குத் தொடர்ந்து பங்களிக்கும் உற்சாகத்தையும் தருகின்றன.

500 பக்க மாநாட்டு இதழைப் படிக்கத் தொடங்கியுள்ளேன். HTMl, Epub, mobi, A4 PDf, 6 Inch PDF  ஆகிய வடிவங்களில் வெளியிடக் கோரியுள்ளேன்.

மாநாட்டை சிறப்புற நடத்திய உத்தமம் அமைப்புக்கு நன்றி. மாநாட்டு ஏற்பாட்டு செயல்களில் என்னையும் சேர்த்த செல்வமுரளிக்கு நன்றி. பல்வேறு இனிய அனுவங்கள், கற்றல்கள் நடந்தன.

நான் பணியாற்றும் நிறுவன http://TVFPlay.com நண்பர்கள் பல சிக்கலான நேரங்களிலும் எனக்காக பணியாற்றி மாநாட்டுக்கான நாட்களை எனக்குத் தந்தனர். அவர்களுக்கும் நன்றி.

எப்போதும் என் எல்லா செயல்களிலும் துணையிருக்கும் நித்யா, வியன் இருவருக்கும் என்றும் என் அன்பு உரித்தாகுக.

 

Saturday, April 09, 2016

புகைப்படக் கலைக்கென்று ஓர் இதழ்! - பெஸ்ட் போட்டோகிராபி டூடே

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD5BL4KmJqUAwzKAPC7UMRekchRVG17Ut9Jfier4OtZQlIVccEXJiPHMQlgNzj4GNWR2PJ6m0gtnPb6UemdzY7HufRdFARuNb_9ntdkXgnTCIkwtJRhw2idoaPkb43jUDwJbCc/s1600/Best+Photography+Today+-+Sep+2015.jpg

இன்று சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் சென்றேன். புது வரவுகள் நிறைய இருந்நன. டாவின்ஸி கோட் தமிழில் இருந்தது. ரூ 700. விலைதான் நிறைய யோசிக்க வைத்தது. எடுத்த இடத்திலேயே வைத்து விட்டேன்.

மனவருத்தும் போக்குவது போல, இந்த இதழைப் பார்த்தேன். (மாத இதழ் ;-)
'பெஸ்ட் போட்டோகிராபி டூடே'. அட. ஆமாம். தமிழில் புகைப்படக் கலைக்கென ஒரு மாத இதழ்.ஐ

புது முயற்சிக்கு ஆதரவு அளிக்கலாம் என 5 பழைய இதழ்களை சேர்த்து வாங்கினேன். உண்மையிலேயே பெரிய சாதனை. பல்வேறு புகைப்படக் கருவிகள் அறிமுகம், புகைப்பட நுட்பங்கள், கலைஞர்கள் பேட்டிகள், பல்வேறு நிகழ்வுகள் என கலக்கலாக உள்ளது இதழ்.

எல்லா புது முயற்சிகளும் சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே நடக்கும் என்ற கூற்றை பொய்யாக்கும் வகையில் நாகர்கோயில் ஒழுகினசேரியில் இருந்து இதழ் வெளியிடப் படுகிறது. இதழில் காணக்கிடைக்கும் விளம்பரங்களும் தென் தமிழ்நாட்டின் புகைப்படக்கலையின் முன்னேற்றங்களைக் கூறுகின்றன.

இதழுக்கு பங்களிக்கும் அனைவருக்கும் பல்லாயிரம் வாழ்த்துகள்.

இணையத்தில் தேடியதில் தெரிந்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவருகிறதாம். சிறப்பு வாழ்த்துகள்.

வரும் வாரத்தில் பணவோலை அனுப்பி சந்நா செலுத்தப் போகிறேன். வாருங்கள், தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் உழைக்கும் நண்பர்களை ஆதரிப்போம்.



பெஸ்ட் போட்டோகிராபி டுடே
28, ஆராட்டு ரோடு, ஒழுகினசேரி,
நாகர்கோவில் -& 629 001.
அலைபேசி: 94434 95151

சில சுவாரசியமான தகவல்களுக்கு -


http://www.dinamani.com/weekly_supplements/kadhir/2015/10/04/புகைப்படக்-கலைக்கென்று-ஓர்-/article3062497.ece


https://natarajank.com/2014/05/22/விளையும்-பயிர்-தெரியும்/


கூடுதல் விவரம் -

http://photography-in-tamil.blogspot.in/  
என்று ஒரு தளத்தில் புகைப்படக்கலையில் ஆர்வமிக்க நண்பர்கள் இணைந்து கட்டுரைகள் எழுதுகின்றனர். போட்டிகளும் உண்டு. அவர்களுக்கும் நன்றிகள்.






Wednesday, January 13, 2016

மென்பொருள் விடுதலை விழா

ஒவ்வொரு நாடும், பிற நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாளை
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடுவர்.


ஆனால், இது என்ன மென்பொருள் விடுதலை விழா? மென்பொருள் துறையில் கூட
அடிமைத்தனம், ஆதிக்கம் போன்றவை உண்டா? ஆமாம். நம் எல்லோரையும் பல்வேறு
பெரு நிறுவனங்கள் தமது மென்பொருள் வழியே அடிமையாக்கி வருகின்றன.

நாம் பணம் கொடுத்து வாங்கும் பொருட்கள் யாவும் நம்முடையவை தானே. நீங்கள்
வாங்கும் ஒரு வாகனத்தை எங்கு வேண்டுமானாலும் ஓட்டிக்கொண்டு
போகலாம்.அதைக்கொண்டு அலுவலகம் மட்டும்தான் போக வேண்டும்.
கடைத்தெருவிற்கோ, கடற்கரைக்கோ, உறவினர் வீட்டுக்கோ போகக்கூடாது என்று
யாரும் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால், மென்பொருள் உலகில் Home Edition, Academic Edition, Professional
Edition என ஒவ்வொரு வகைப் பயன்பாட்டுக்கும் தனி வெளியீடு. தனி விலை.
கல்லூரியில் பயன்படுத்தும் ஒரு மென்பொருளை வீட்டுக்குக் கொண்டுவரக்
கூடாது. நீங்கள் போகும் இடங்களுக்கேற்ப தனித்தனி வாகங்கள் வாங்கி
ஓட்டுவீர்களா?

உங்கள் வாகனத்தை நீங்கள் ஓட்டலாம். நண்பருக்கு இரவல் தரலாம். உறவினர்,
குடும்பத்தினருக்கு இனாமாகத் தரலாம். யாருக்கேனும் பாதி விலைக்கு
விற்கலாம். முற்றிலும் பழுதடைந்து விட்டால், தனித்தனி பாகங்களாகப்
பிரித்து, பழைய பொருட்கள் விற்பனைக் கடையில் விற்கலாம்.

ஆனால், நீங்கள் வாங்கிய மென்பொருளை அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா,
தங்கை, உறவினர், நண்பர் என யாருக்கும் தரக்கூடாது. தந்தால் அது திருட்டு
(Piracy) நீங்கள் திருடர். சட்ட ரீதியாக தண்டனைக்குரிய குற்றம் இது.

இந்தக் கட்டுப்பாடுகள் ஏன்? நமக்கு உடமையான ஒரு பொருளை நாம் யாருக்கும்
தரலாம்தானே. பகிர்ந்து வாழ்வது தானே மனித சமுதாயம்! சிறு வயதில்
சாக்லேட், பேனா, பென்சில் என பகிர்ந்திருப்போமே. கல்லூரி நண்பர்கள்
ஆடைகளைக்கூட பகிர்வதைக் காணலாம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

- குறள் 322

என்கிறார் வள்ளுவர். அடிப்படைத்தேவையான உணவைக் கூட, பகிர்ந்து உண்ணவே சொல்கிறார்.

மென்பொருளை மட்டும் பகிரவே கூடாதாம்.


உங்கள் வாகனத்தில் சிறு பழுது. என்ன செய்வீர்கள்? அருகில் உள்ள பழுது
நீக்கும் நிலையம் சென்று சரி செய்து கொள்வீர்கள். இயந்திரவியல்
தெரிந்தால் நீங்களே கூட சரி செய்து கொள்ளலாம். வாகனம் பற்றி விரிவாக
அறிய, நீங்களே வாகனத்தை பிரித்து மாட்டி, கற்றுக் கொள்ளலாம்.

மென்பொருளில் ஒரு பழுது என்றால்? அதை உருவாக்கிய நிறுவனத்திடம் தான்
புகார் அளிக்க முடியும். அவர்கள் அதை சரிசெய்ய சில ஆண்டுகள் ஆகலாம்.
பெரும்பாலும் சரி செய்வதே இல்லை. ஆனால் வேறு புதிய பதிப்பை வாங்கச்
சொல்லி வற்புறுத்துவர்.

உங்கள் வாகனம் பஞ்சர் ஆனால் சரி செய்ய முயல்வீர்களா? புது வாகனம் வாங்க
யோசிப்பீர்களா?

நீங்கள் மென்பொருள் துறையில் வேலை செய்து, அதன் நுட்பங்களை
அறிந்திருந்தாலுமே, நீங்கள் வாங்கும் மென்பொருளை உங்களால் பழுதுபார்க்க
முடியாது. ஒரு மெக்கானிக்கிடம் போய், அவரால் பஞ்சர் கூட ஒட்ட முடியாத,
ஒரு வாகனத்தை, அவரிடம் யாரால் விற்க முடியும்? ஆனால் மென்பொருள்
நிறுவனங்கள் இதைத்தான் செய்கின்றன.

இவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்ட மென்பொருட்களின் விலைகளைப் பார்ப்போமா?

சில பிரபர மென்பொருட்களின் விலைப்பட்டியல்.


விண்டோஸ் இயக்குதளம் 10,000
visual studio – 1,50,000
MS OFfice – 10,000
Photoshop 50,000
Oracle server – 1,50,000
Oracle client – 6000


இவ்வாறு சுமார் 50,000 ரூபாய் விலை உள்ள கணிணியில் நிறுவும்
மென்பொருட்களின் விலை மட்டுமே சில லட்சங்கள். இது ஒரு கணிணிக்கான விலை
மட்டுமே. 100 கணிணிகள் இருந்தால் 100 மடங்கு விலை. மொத்தமாக வாங்கினால்,
சிறிது குறையலாம்.

இந்தியா முழுதும் எத்தனை கணிணி நிறுவனங்கள்? எத்தனை கணிணிகள்?
மென்பொருளுக்காக மட்டும் இந்தியா செய்திருக்கும் செலவில், புது நாட்டையே
உருவாக்கியிருக்கலாம்.
 
அட. நான் இதுவரை எந்த மென்பொருளையும் வாங்கியதில்லையே. திருடித்தானே
வருகிறேன். என்ன பிரச்சனை என்கிறீர்களா? பெரு நிறுவனங்கள் தனி நபர்கள்
செய்யும் திருட்டைக் கண்டுகொள்வதில்லை. அப்போதுதான் எங்காவது வேலைக்குப்
போனால், அதே மென்பொருளையே கேட்பீர்கள். நிறுவனங்கள் திருட்டு செய்ய
இயலாது. உங்களுக்காக அவை பணம் கொட்டி, அந்த மென்பொருளை வாங்கித்
தருகின்றன.

இவ்வாறு இந்தியர்களின் பணம், ஆண்டுதோறும் பல்வேறு நிறுவனங்களுக்கு கப்பம்
கட்டியே செலவாகின்றது. பல்லாயிரக்கணக்கில் கொட்டி வாங்கும்
மென்பொருளுக்கு நம்மிடம் எந்த உரிமையும் இருப்பதில்லை.

இது அடிமைத்தனம் தானே.

இது போல எந்த உரிமையும் தராமல், நம்மை அடிமைப்படுத்தும் மென்பொருட்களை
‘தனியுரிம மென்பொருட்கள்’ Properitory Software என்கிறோம். இவை மனித
சமுதாய வளர்ச்சிக்குத் தீங்கானவை. அறிவுப் பரவலை தடுப்பவை. சக்கரம்
கண்டுபிடித்தவன் இன்றுவரை உருவான ஒவ்வொரு சக்கரத்திற்கும் உரிமை
கொண்டாடியிருந்தால், உலகின் பெரு நிறுவனமாகி இருக்கலாம். ஆனால் மனித
சமுதாயம் வளர்ந்திருக்காது.


பெருநிறுவனங்களிடம் அடிமைப்பட்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு விடுதலை
தர, மக்களால், மக்களுக்காக உருவாக்கப் பட்டவையே ‘கட்டற்ற மென்பொருட்கள்’
Free Software. இங்கு Free என்பது இலவசம் அல்ல. Freedom.

இந்தக் கட்டற்ற மென்பொருட்கள் தனி நிறுவனங்களின் சொத்து அல்ல. உலக மக்கள்
யாவருக்கும் உரியவை. மனித சமுதாயத்தின் மேல் கொண்ட எல்லையற்ற அன்பினால்,
பல்லாயிரம் கணிணி வல்லுனர்கள் உலகெங்கும் இருந்து ஒன்றாக இணைந்து
கணிணிக்குத் தேவையான எல்லா மென்பொருட்களையும் உருவாக்கி, கட்டுப்பாடுகள்
ஏதும் இல்லாமல் கட்டற்ற மென்பொருட்களாக வெளியிட்டு வருகின்றனர்.

இவை 4 உரிமைகளுடன் வருகின்றன.

1.எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை

ஒரே பதிப்புதான். Academic, Home, Professional edition எதுவும் இல்லை.
எங்கும் பயன்படுத்தலாம்.

2. யாவருடனும் பகிரும் உரிமை

உங்களிடம் உள்ள ஒரு கட்டற்ற மென்பொருளை யாவருடனும் பகிரலாம். பல்லாயிரம்
பிரதிகள் எடுக்கலாம். நேரில் தரலாம். மின்னஞ்சலில் அனுப்பலாம். உங்கள்
இணையதளத்தில், Torrent ல் என எங்கும் பகிரலாம்.

3. நீங்களே பழுது நீக்கலாம். மேம்படுத்தலாம்

மென்பொருளில் உள்ள பழுதுகளை நீக்க, அதன் மூலநிரல் (Source Code)
வேண்டும்.கட்டற்ற மென்பொருட்கள் மூல நிரலுடனே பகிரப் படுகின்றன. யாவரும்
மூல நிரலைப் பெற்று, படித்துப் புரிந்து கொள்ளலாம். பழுது நீக்கலாம்.
புதிய கூறுகளைச் சேர்த்து மேம்படுத்தலாம். உங்களுக்குத் தேவையான படி,
நீங்களே மாற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு நிரலாக்கம் (Programming)
தெரியவில்லையா? கவலை வேண்டாம். நம் நாட்டில் நிரலாளர்கள்தான் எங்கும்
உள்ளனரே. கணிணி மாணவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களை வைத்து
மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

4. மாற்றங்களை புதிய பதிப்பாக வெளியிடலாம்

நீங்கள் திருத்திய, பழுது நீக்கிய, மேம்படுத்திய ஒரு மென்பொருளை, புதிய
பதிப்பாகக்கூட வெளியிடலாம். புதிய பெயரில் கூட.

இவ்வாறு நீங்கள் வெளியிடும், பகிரும் மென்பொருட்களை இதே உரிமைகளோடு, மூல
நிரலுடன் வெளியிட வேண்டும். இலவசமாகத் தரலாம். பணத்திற்கும் விற்பனை
செய்யலாம்.

இந்தக் கட்டற்ற உரிமைகள் ‘பொது மக்கள் உரிமை’ (General Public License -
GPL) எனப்படுகின்றன.

நீங்கள் தனியுரிம மென்பொருட்கள் நிறுவும் போது, EULA(End User License
Agreement) க்கு  I Agree என்பீர்கள். அது உங்களை அடிமைப்படுத்தும் ஒரு
அடிமைப்பத்திரம். கட்டற்ற மென்பொருட்களை நிறுவும் போது, GPL க்கு I Agree
என்பீர்கள். அது உங்கள் விடுதலைப்பத்திரம்.


தனியுரிம மென்பொருட்களால் அடிமைப்பட்டிருக்கும் மக்களுக்கு, கட்டற்ற
மென்பொருட்களால் விடுதலை தரும் இந்த விடுதலைப் போராட்டம், 1983 ல்
தொடங்கியது. இதை GNU (GNU Not Unix) என்ற மென்பொருள் தொகுப்புகளோடு
தொடங்கியவர் ரிச்சர்ட் ஸ்டால்மன். Richard M Stallman (RMS). அவர்
தொடங்கிய இந்த இயக்கம், இன்று கற்பனைக்கும் எட்டாத அளவில் வளர்ந்து, பல
கோடி கட்டற்ற மென்பொருட்களைத் தந்துள்ளது.

download (15)
Richard M Stallman

 

இயக்குதளம் – GNU/Linux
ஆபிஸ் – LibreOffice
நிரலாக்கம் – PHP/Python/Ruby/C/C++
வரைகலை – GIMP, Inkscape
3D – Blender
வீடியோ எடிட்டிங் – OpenShot, Kdenlive, ffmpeg
ஆடியோ எடிட்டிங -Audacity

இது போல, உங்கள் தேவைகள் அனைத்திற்கும் கட்டற்ற மென்பொருட்கள் கிடைக்கின்றன.

உபுண்டு(Ubuntu), லினக்ஸ் மின்ட் (Linux Mint) போன்ற குனு/லினக்ஸ்
பதிப்புகள், நல்ல அழகான,எளிய இடைமுகப்புடன் தனிநபர்களாலும் பெரு
நிறுவனங்களாலும் பயன்படுத்தப் படுகின்றன.


இது மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஒரு விடுதலைப் போராட்டம்.
இன்னும் பல்லாயிரம் பேர் தனியுரிம மென்பொருட்களால் அடிமைப் படுத்தப்
பட்டுள்ளனர். அவர்களுக்கு கட்டற்ற மென்பொருட்களை அறிமுகம் செய்ய,
உலகெங்கும் செப்டம்பர் 17 அன்று ‘மென்பொருள் விடுதலை விழா’ (Software
Freedom Day) கொண்டாடப் படுகிறது.
 
download
 
பல்வேறு தன்னார்வக்குழுக்கள் பொது இடங்கள், பள்ளி, கல்லூரி,
நிறுவனங்களில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரை, உரையாடல், கண்காட்சி,
விளக்கவுரைகள், நடத்தி வருகின்றனர்.

‘என் தங்கம், என் உரிமை’ போன்ற விளம்பரப் போராட்டம் அல்ல இது. ‘நம்
மென்பொருள், நமது உரிமை’ என்ற உரிமைப் போராட்டம்.

உங்கள் ஊரிலும் கட்டற்ற மென்பொருள் பற்றிய அறிமுக உரைகள், பயிலரங்குகள்,
பயிற்சிகள் நடத்த அருகில் உள்ள GNU/Linux Users Group ஐ அணுகுங்கள்.
அல்லது எனக்கு எழுதுங்கள்.

எல்லாம் சரி. எல்லா மென்பொருட்களையும் இலவசமாகவே, மூல நிரலுடன் தந்து
விட்டால், எப்படி காசு பார்ப்பது?

கட்டற்ற மென்பொருட்களை இலவசமாகவே தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நல்ல
விலைக்கும் விற்கலாம். Redhat, CollabNet போன்ற பல நிறுவனங்கள் கட்டற்ற
மென்பொருட்களை  கூடுதல் வசதிளோடு விற்கின்றன.

அது சரி. மூல நிரல் தந்துவிட்டால், எல்லாரும் திருடி விற்பார்களே. பின்
எப்படி வியாபாரம் செய்வது?

உங்களுக்கு சமைக்கத் தெரியுமா? உங்கள் வீட்டில் யாருக்காவது சமையல்
தெரியும் தானே. இணையத்தில் பல்லாயிம் தளங்கள் தினமும் புது சமையல்
குறிப்புகளைத் தருகின்றன. சமையல் நூல்கள்எங்கும் விற்கப் படுகின்றன.
ஆனாலும் தெருவெங்கும் உணவகங்கள். சாலையோரக்கடை முதல் 5 நட்சத்திர உணவகம்
வரை எல்லோருக்கும் தெரிந்த சமையல் குறிப்புகளைக் கொண்டே, பெருமளவில் பணம்
சம்பாதித்துக் கொண்டுதானே இருக்கின்றனர்.

ஐஐயோ. சமையல் குறிப்புகள் எல்லாருக்கும் தெரிந்து விட்டன. இனி பிழைக்க
முடியாது என ஒரு உணவகமாவது மூடப்பட்டுள்ளதா? ஒரு உணவக உரிமையாளருக்கு
உள்ள தைரியம் ஏன் மென்பொருள் நிறுவன உரிமையாளர்களுக்கு இருக்கக்கூடாது?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


••••••••

மலைகள் இதழ் 82 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7316


உங்கள் புகைப்படங்களைப் பகிரலாமா?

இன்றைய நவீன வாழ்வு நமக்கு அளித்துள்ள பெரும் வசதிகளில் ஒன்று புகைப்படங்கள். பிலிம் ரோல்களைப் பயன்படுத்தி, படம் எடுத்து, சில மாதங்கள் கழித்து, நிறைய பணம் செலவழித்து அவற்றை அச்சடித்து பார்த்து மகிழ்ந்த காலங்கள் இனிய நினைவுகளாகி விட்டன.

திறம்மிக்க DSLR முதல் Point & Shoot அல்லது கைபேசிக்காமிரா வரை அவரவர் வசதிக்கேற்ற கருவிகளில் இன்று படம் எடுத்து மகிழ்கிறோம். உடனுக்குடன் பார்க்கும் வசதி, கருவிகளிலேயே மெருகேற்றும், திருத்தும் வசதி, இணையத்தில் பகிரும் வசதி என மன்னர்களுக்குக் கூட இல்லாத வசதிகள் இன்று சாமானியருக்கும் கிடைக்கின்றன.

நாம் உண்ணும் உணவு, பார்க்கும் இடங்கள், நண்பர்கள் என அனைத்தையும் சுட்டுத் தள்ளி விடுகிறோம். Facebook, Flickr, Instagram, 500px, snapchat எனப் பல தளங்களில் பகிர்ந்து Like களுக்காகத் தவம் இருக்கிறோம்.

இவ்வாறு நாம் எடுக்கும் புகைப்படங்களை, பிறர் தமது வலைப்பதிவுகளிலோ, நூல், மின்னூல்களிலோ பயன்படுத்த அனுமதிக்கிறோமா?
பெரும்பாலோர் அனுமதிப்பதில்லை.  © Copyright என்று அறிவித்து விட்டு, படங்களின் மறுபயன்பாட்டைத் தடுத்து விடுகிறோம்.

இவ்வாறு அனுமதி மறுப்பதால் பலவகையான இழப்புகள் ஏற்படுகின்றன. சில உதாரணங்களைக் காண்போம்.

திரு.சகாயம் IAS அவர்களைப் பற்றி ஒரு மின்னூல் உருவாக்கத் திட்டமிட்டு இருந்தோம். அவர் படங்களை இணையத்தில் தேடினால், காப்புரிமை கொண்ட படங்கள் மட்டுமே கிடைக்கின்றன. search.creativecommons.org தளத்தில் பகிரும் உரிமை உள்ள படங்கள் கிடைக்கும். அதில் தேடினால், விக்கிப்பீடியாவில் உள்ள ஒரே ஒரு சின்ன படம் மட்டுமே கிடைக்கிறது.





இதே போல யோகாசனம் பற்றிய மின்னூலுக்கும் போதிய படங்கள் கிடைக்கவில்லை.

இறையன்பு IAS, நடிகர் விஜயகாந்த், பாடகர் SPB, இசைஆனி இளையராஜா போன்றோருக்கும் ஒரு சில படங்கள் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் 200×200 போன்ற சிறிய அளவிலேயே கிடைக்கின்றன. images.google.com ல் தேடினால், எல்லாப் படங்களும் உயர்தரத்தில் கூட கிடைக்கின்றன. ஆனால் அவை காப்புரிமை எனும் விலங்கினால் கட்டப்பட்டுள்ளன. http://www.google.com/advanced_image_search ல் usage rights: free to use or share தந்து தேடிப்பாருங்கள்.

உலகின் அறிவையெல்லாம் கட்டற்ற உரிமையில் தொகுக்கும் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளில் ஏதேனும் படங்களைச் சேர்க்க, அவை Creative Commons Attribution ShareAlike என்ற உரிமையில் இருத்தல் வேண்டும். இந்த உரிமையில் படங்கள் கிடைக்காததால், பெரும்பாலான கட்டுரைகள் படங்கள் இல்லாமலேயே எழுதப் படுகின்றன. இது சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்குப் பெரும் இழப்பு தானே.

சில கேள்விகளும் பதில்களும்

நான் படங்களை இணையத்தில் ஏற்றுவதே பிறர் பகிரத்தானே. ஏன் தனியாக உரிமம் பற்றி சொல்லவேண்டும்?

உரிமம் பற்றி சொல்லாத படங்கள், தாமாகவே காப்புரிமை விலங்கு பெறுகின்றன. பிறர் பகிரவும் பயன்படுத்தவும் விரும்பினால் Creative Commons  உரிமையை சொல்ல வேண்டும்.

Creative Commons உரிமை என்றால் என்ன?

உங்கள் படைப்புகளை பிறர் பகிரவும், பயன்படுத்தவும் தரும் அனுமதியே இது.  மேலும் அவற்றில் மாறுதல் செய்யலாமா? கூடாதா?, வணிகரீதியில் பயன்படுத்தலாமா? கூடாதா? என்றும் வரையறுக்கலாம். இதற்கேற்ப பின்வரும் 6 உரிமைகள் உள்ளன.





பிறர் உங்கள் படைப்புகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் பெயரை கட்டாயம் சொல்லியாகவேண்டும். எனவே படைப்புத் திருட்டு பற்றி பயப்படவேண்டாம்.

சிலர் எனது படங்களைத் திருடி, தம் பெயரில் வெளியிட்டால் என்ன செய்வது?
சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கலாம். அந்தந்த நாட்டு சட்டங்களை இந்த creative commons உரிமைகள் ஆதரிக்கின்றன.

இணையத்தில் திருட்டைத் தடுக்க இயலாது. ஆனால் 100% விதிகளுக்கு உட்பட்டே பகிரவிரும்பும் நண்பர்களுக்கு உங்கள் படைப்புகள் உதவட்டுமே. உங்கள் படங்கள் விக்கிப்பீடியா பக்கங்களிலும், பல வலைப்பதிவுகள், நூல்கள், மின்னூல்களில் உங்கள் பெயருடன் பகிரப்படுவது மகிழ்ச்சிதானே.

எப்படி creative commons படங்களைத் தேடுவது?

search.creativecommons.org
https://www.flickr.com/creativecommons/
images.google.com போன்றவற்றில் பகிரும் உரிமை கொண்ட படங்களைத் தேடலாம்.





சரி, நான் என்ன செய்ய வேண்டும்?

* உங்கள் படங்களை commons.wikimedia.org ல் பதிவேற்றுங்கள்.

* Flickr ல் உரிமைப் பகுதியில் creativecommons  தெரிவு செய்யுங்கள்
http://www.wikihow.com/Apply-the-Creative-Commons-License-to-Flickr-Photographs

* Google+ images  ல் உரிமைப் பகுதியில் creativecommons  தெரிவு செய்யுங்கள்
http://www.stevegillphotos.co.uk/2012/03/using-creative-commons-license-on.html

இவ்வாறு பகிர்வதால் உங்கள் பெயரும் படங்களும் பரவுவதோடு, வணிகவாய்ப்புகளும் கிடைக்கும்.

உலக அளவில் புகழ் பெற்ற காட்டுயிர் புகைப்படக்கலைஞர், கல்யாண் வர்மா, தம் படங்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுவதால் பெறும் பலன்களை TED உரையில் விளக்கும் காணொளி இதோ.




http://www.inktalks.com/discover/117/kalyan-varma-free-art-is-profitable

உங்கள் புகைப்படங்களும் சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்பட அனுமதியுங்கள். பகிர்தலை ஆதரியுங்கள்.

ஐயங்களுக்கு தயங்காமல் எழுதுக.

••••••••

மலைகள் இதழ் 81 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7205

கூகுளின் இலவச எழுத்துணரி

பழைய அச்சு நூல்களைப் பாதுகாக்க ஒரு எளிய வழி, அவற்றை ஒரு ஒளி வருடி (scanner) ல் வருடி, உயர்தரப் படங்களாக சேமித்து வைப்பது. இவ்வாறு மின்மயமாக்கும் பணியை (Digitization) பலரும் பல்வேறு இடங்களில் இயன்ற போது செய்து வருகின்றனர். தமிழ் இணையக் கல்விக் கழகம், தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற அமைப்புகளும், பொள்ளாச்சி நசன் போன்ற தனியாரும் செய்து வருகின்றனர்.

விலை குறைந்து வரும் ஒளி வருடிக் கருவிகளும் camscanner போன்ற திறன்பேசிச் செயலிகளும் கொண்டு இன்று ஆர்வம் உள்ள எவரும் அச்சு நூல்களை மின்னூலாக்கி விடலாம்.

பொதுவாக இந்த மின்னூல்கள் JPEG அல்லது PDF வடிவிலேயே சேமிக்கப் படுகின்றன. மின்னூல்களின் உண்மையான பயன்கள் அவை உரை வடிவில் இருந்தால் மட்டுமே கிடைக்கும். Epub, Mobi, HTML போன்ற வடிவங்களுக்கு மாற்றுதல், மின்னூல் படிப்பான் (Ebook reader), திறன்பேசிகள் போன்ற கருவிகளில் படித்தல், நூல்களுக்குள் தேவையான வார்த்தைகளைத் தேடுதல் போன்றவற்றை PDF ல் செய்ய இயலாது.

ஒரு PDF ஐ உரை வடிவில் மாற்ற, தட்டச்சு செய்வது தான் ஒரே சிறந்த வழியாக இருந்து வருகிறது. PDF ல் இருந்து உரையை அப்படியே பிரித்தெடுக்கும் முறை இருந்தால் நன்றாக இருக்கும் என்பது ஒரு நெடு்ங்கனவு. இதற்கு OCR – Optical character recognition என்று பெயர். ஆங்கிலத்தில் tesseract OCR என்ற கட்டற்ற மென்பொருள் இதை சிறப்பாக செய்கிறது.

தமிழில் ஒளி உணரிக்கான தேவையும் ஏக்கமும் வெகு காலமாகவே உள்ளது. Tesseract OCR க்கு வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. என் நண்பர் பாலவிக்னேஷ் அந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். 
kbalavignesh@gmail.com
https://printalert.wordpress.com/2014/10/28/tesseract-training-more-fonts/


இது தவிர பொன் விழி எனும் OCR மென்பொருளும் learnfun நிறுவனத்தால் விற்கப்பட்டுகிறது.
http://learnfunsystems.com/products/tamil.htm

மத்திய அரசும் OCR ஆய்வு செய்து வருகிறது. (IISc, Banglore) ஆய்வுகளுக்கும் தனியார் அமைப்புகளுக்கும் மட்டும் வழங்கப் படுகிறது.
மக்கள் பணத்தில் நடக்கும் ஆய்வுகளும் மென் பொருட்களும் பொது மக்களுக்கு மறுக்கப்படுவது விந்தையே.

ஆங்கிலத்தில் மொழி சார் மென்பொருட்களான சொற்பிழைத் திருத்தி, இலக்கணப் பிழைத் திருத்தி,OCR, Text to speech, speech to text போன்றவை சிறப்பாக இருக்க முக்கியக் காரணம் அவற்றின் மீதான ஆய்வுகளும் மென் பொருட்களும் கட்டற்ற முறையில் மூலநிரலுடன் பொது மக்களுக்கு எளிதில் கிடைப்பது தான். அரசு நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் தமது படைப்புகளை மக்களுக்கு மூல நிரலுடன் அளிக்கின்றன. அவற்றைப் பலரும் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர்.

தமிழிலோ நிலைமை தலைகீழ். அரசும் பல்கலைக் கழகங்களும் தம் மென்பொருட்களையும் ஆய்வுகளையும் யாருக்கும் தருவதில்லை. ஆய்வு அறிக்கையும் மென் பொருட்களும்  பீரோவில் பூட்டி வைக்கப் படுகின்றன. இதே ஆய்வு மீண்டும் வேறு ஒரு அரசுத் துறையில், வேறு பல்கலைக்கழகத்தில் மீண்டும் பெரும் பொருட்செலவுடன் தொடங்கும். பிறகு பீரோவில் ஒளிந்து கொள்ளும்.

இதனால்தான் தமிழுக்காக அதிக மென்பொருட்கள் இல்லை.  தமிழ்நாட்டில் மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் இல்லாத ஊரே இல்லை எனலாம். ஆனாலும் ஒரு சிறந்த சொற்பிழைத் திருத்தியோ, இலக்கணப் பிழைத் திருத்தியோ இல்லை. நாம் படிக்கும் செய்தித்தாள்களில், விளம்பரங்களில், இணையப் பக்கங்களில், சுவரொட்டிகளில் எழுத்துப்பிழை கண்டால், ஒவ்வொரு மென்பொருள் வல்லுனரும் வெட்கப்பட வேண்டும்.

தற்போது மொழியியல் ஆய்வுகளில் கூகுள் போன்ற நிறுவனங்களும் விக்கிமீடியா போன்ற அமைப்புகளும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.

சமீபத்தில் தமிழர்களின் நெடுநாள் கனவான OCR, எழுத்துணரியை கூகுள் இலவசமாக வெளியிட்டுள்ளது. Google Drive ல் ஒரு படத்தை ஏற்றி, அதை Google Doc ஆகத் திறந்தால் OCR செய்யப்பட்டு, படமும் அதற்கான உரையும் கிடைக்கிறது. தமிழ் உள்ளிட்ட 200 மொழிகளில் கிடைக்கிறது.

இதற்கான செய்முறை இதோ.


http://www.thewindowsclub.com/google-drive-convert-image-to-text

Google Drive இல் 2MB இற்கு குறைவான படக்கோப்பினை தரவேற்றம் செய்யுங்கள் .பின்னர் அந்த கோப்பில் வலது கிளிக் செய்து Google Doc ஊடாக திறந்தால் அது சொற்கோப்பாக மாறிவிடும்

மேலதிக உதவி
https://support.google.com/drive/answer/176692?hl=en

மாற்றப்பட்ட எடுத்துக்காட்டான கோப்புகள்
https://docs.google.com/document/d/1OXre4-phQOayE0wyGTttQq-eD3Djt_alsuhkmS8BeRI/edit
https://docs.google.com/document/d/12_6eTMMrDbWcVMQIvv8kGFbHizYcG8_ca4OieBbKjUw/edit


இது சிறப்பாக வேலை செய்ய, படம் குறைந்தது 300 DPI ஆவது இருக்க வேண்டும். அதற்கும் குறைவாக இருந்தால் எழுத்துக்கள் சரியாக வருவதில்லை.

இதுவரை வந்த எழுத்துணரி மென்பொருட்களில் பெருமளவு சிறப்பாக இருப்பது இதுவே. ஒரு பெரிய நூலின் ஒவ்வொரு படமாக ஏற்றி, அதை OCR செய்து உரையாக மாற்றி சேமிப்பது கடினம். அதை தானியக்கமாகச் செய்ய ஒரு மென்பொருள் உருவாக்கியுள்ளேன். லினக்ஸ் இயங்குதளத்தில் பைதான் மொழியில் எழுதினேன். கட்டற்ற மென்பொருளான இதன் மூலநிரலை இங்கே பதிவிறக்கலாம்.
https://github.com/tshrinivasan/google-ocr-python
இதனை மேம்படுத்தவும், பிற இயக்குதளங்களுக்கு மாற்றவும் விரும்புவோர் செய்து கொள்ளலாம்.

உங்களிடம் உள்ள எல்லா PDF ஆவணங்களையும் உரையாக கூடிய விரைவில் மாற்றிக் கொள்ளுங்கள். தன் சேவையை கூகுள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம். Orkut, RSS reader, Buzz, code search, wave என தன் சேவையை மூடுவது கூகுள் வழக்கமாகச் செய்யும் ஒன்று.

தமிழுக்கென கட்டற்ற மென்பொருளாக ஒரு OCR உருவாக்குவது,  Tesseract OCR க்கு தமிழைப் பயிற்றுவிப்பது போன்றவையே நல்ல, நிரந்தரத் தீர்வுகள். ஆர்வமுள்ளோர் எனக்கு எழுதுங்கள். இணைந்து பணியாற்றி நம் கனவுகளை நாமே நனவாக்குவோம்.
http://www.youtube.com/watch?v=PH9TnD67oj4




 ••••••••

மலைகள் இதழ் 83 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7382

மின்னூல் உலகம்


https://pixabay.com/static/uploads/photo/2014/07/01/12/37/kindle-381242_960_720.jpg

இணையத்தின் வளர்ச்சிக்குப்பின், மின்னூல்களின் புதுயுகம் வந்துள்ளது. அச்சு நூல்கள் உருவாக்க ஆகும் காலம், உழைப்பு, பணம், விற்பனைச் சிக்கல்களுக்கு, தொழில்நுட்ப வளர்ச்சி தரும் தீர்வு மின்னூல்கள்.

மின்னூல் படிக்கும் கருவிகள்

HTML வடிவில் இணையதளங்களில் உலாவி(Browser) மூலமும் PDF வடிவிலும் கணிணியில் மின்னூல் படித்த காலங்கள் போய், இப்போது மின்னூல்களைப் படிப்பதற்கென்றே சிறப்புக் கருவிகள் உள்ளன. அமேசான் கிண்டில், நூக், சோனி, கோபோ போன்ற பல கருவிகள் சந்தையில் பல்வேறு திரை அளவுகளில் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் E-Ink என்ற சிறப்புத் திரை உள்ளது. இது காகிதத்தில் படிப்பது போன்ற இனிமையைத் தருகிறது. டேப்லட், கணிணி, திறன்பேசி போன்றவற்றில் உள்ள LCD திரையானது, ஓரிரு மணிகள் கூட, தொடர்ந்து படிக்கவிடாமல், கண்களுக்கு சோர்வு தருகின்றன. ஆனால் E-Ink திரையானது, அச்சு நூல் தரும் அதே இனிமையைத் தருவதால், பல மணி நேரங்கள் சோர்வின்றிப் படிக்க முடிகிறது.

பேட்டரியை காலி செய்யும் திறன்பேசிகள் போலன்றி, ஒரு இரவு முழு சார்ஜ் செய்தாலே, ஒரு மாதம் முதல் இரு மாதங்களுக்கு தொடர்ந்து செயல்படவல்லவை இந்தக் கருவிகள்.

திறன்பேசிகளிலும் மின்னூல்கள் படிக்கலாம். ஆனால், நம் குரங்கு மனம், சிறிது நேரத்திலேயே அதில் மின்னஞ்சல் பார்க்கவோ, சமூக ஊடக செயலிகளை இயக்கவோ, தூண்டும். நொடிக்கொரு முறை notification வந்து ஆசை காட்டும். மின்னூல் படிக்கும் கருவிகளில், இந்தத் தொல்லை இல்லவே இல்லை. நீங்களும் நூலாசிரியரும் மட்டும்தான். நூல்களில் உலகில் நீங்கள் தடையின்றி உலாவிக் கொண்டிருக்கலாம்.

இந்தக் கருவிகள் பெரும்பாலும் 6 அங்குலத் திரை அளவில் கிடைக்கின்றன. 5 அல்லது 7 அங்குல அளவிலும் சில நாடுகளில் கிடைக்கின்றன. 2GB/4GB கொள்ளளவில் கிடைப்பதால் உங்கள் பாக்கெட்டில் ஒரு நூலகத்தையே கொண்டு செல்லலாம்.


மின்னூல் வகைகள்


கணிணியில் நாம் படிக்கும் A4 அளவு PDF கோப்புகளை, இந்தக் கருவிகளில் படிக்க இயலாது. இவற்றுக்கென்று சிறப்பு கோப்பு வகைகள் உள்ளன.

mobi

அமேசான் நிறுவனம், தன் கிண்டில் கருவிகளில் படிப்பதற்கேற்ப mobi என்ற புது கோப்பு வகையை அறிமுகம் செய்தது. இது கிண்டில் கருவி/மென்பொருளில் மட்டும் இயங்கும்.

epub

mobiக்கு மாற்றான ஒரு திறந்தமூல வகையான கோப்பு இது. பல HTML கோப்புகளை ஒன்று சேர்த்து zip செய்த வடிவமே இது.

இதை கிண்டில் தவிர பிற கருவிகளான nook, kobo, sony போன்றவை ஆதரிக்கின்றன. ஆன்டிராய்டில் fbreader, ஆப்பிள் கருவிகளில் iBooks, குனு/லினக்ஸ், விண்டோஸில் fbreader, readium.org(chrome plugin) மூலம் எல்லாக் கருவிகளிலும் படிக்கலாம்.

PDFல் இருப்பது போல, இந்தக் கோப்புகளில், பக்கஅளவு ஏதும் இல்லை. 3 அங்குல மொபைல் முதல் மிகப் பெரியகணிணித் திரைகளிலும் படிக்கும் வகையில், திரை அளவிற்கேற்ப தம் நீள, அகலத்தை மாற்றிக் கொள்கின்றன.

மேலும் எழுத்துரு அளவையும் நாம் விரும்பும் வகையில், ஏற்றி இறக்கிப் படிக்கலாம்.


எங்கே மின்னூல் வாங்கலாம்?


amazon.com, store.kobobooks.com, www.nook.com/gb/store/books, Google Play Books போன்ற தளங்களில் மின்னூல்கள் வாங்கலாம். இவை பெரும்பாலும் DRM என்ற கைவிலங்குடன் வருவதால், நூல்களை அந்தக் கருவிகளில் மட்டுமே படிக்க முடியும். பிறருக்குப் பகிர இயலாது.

இவை தவிர,

http://www.gutenberg.org/

http://archive.org/details/texts

http://openlibrary.org/

போன்ற தளங்களில் பல்லாயிரம் ஆங்கில நூல்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.


மின்னூல் உருவாக்கம்


அமேசான் போன்ற மின்னூல் தளங்களில், தினமும் பல்லாயிரம் நூல் ஆசிரியர்கள் தம் மின்னூல்களைத் தாமே உருவாக்கி, வெளியிட்டு வருகின்றனர். உரை ஆவணமாக நூலை எழுதியவுடன், epub, mobi வடிவங்களில் மாற்ற PressBooks.com, Sigil, Calibre போன்ற அட்டகாசமான, இலவச கட்டற்ற மென்பொருட்கள் உள்ளன.

PressBooks.com மூலம் மின்னூல் உருவாக்குவதைத் தமிழில் விளக்கும் காணொளி –




தமிழில் மின்னூல்கள்

கிண்டில், நூக், கோபோ என எந்த ஒரு கருவியும், தமிழை ஆதரிப்பதில்லை. kindle paperwhite ல் மட்டும் ஒரு நகாசு வேலை செய்து தமிழ் mobi கோப்புகளைப் படிக்கலாம்.

விவரங்கள் இங்கே-.

http://freetamilebooks.com/how-to-fix-tamil-in-kindle-paperwhite/

ஆனால் 6 inch PDF கோப்புகளை நாமே உருவாக்கி, மின்னூல் கருவிகளில் படிக்கலாம். LibreOffice, Firefox, k2pdfopt போன்ற கட்டற்ற மென்பொருட்கள் இதற்கு உதவுகின்றன. முழு விவரங்கள் இங்கே –
http://freetamilebooks.com/how-to-read-tamil-in-kindle-and-other-ebook-readers/

FreeTamilEbooks.com


நாங்கள் ஒரு குழுவாக இயங்கி, தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் எழுதும் வலைப்பதிவுகளைத் தொகுத்து, மின்னூல்களாக மாற்றி, FreeTamilEbooks.com தளத்தில், வெளியிட்டு வருகிறோம்.

DRM கைவிலங்குகள் ஏதும் இன்றி, epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் எல்லாக் கருவிகளிலும் படிக்கும் வகையில் மின்னூல்களை வெளியிடுகிறோம்.


எந்தக் கருவி வாங்கலாம்?


மிகவும் சாதாரண E-Ink திரை கொண்ட கருவியே போதும். கிண்டில் ரூ 6000 வரை ஆகலாம். Kindle Paperwhite என்பது, E-Ink திரைதான். ஆனால் இரவில் ஒளிரும் திரை கொண்டது. கும்மிருட்டில் படிக்க விரும்புவோர் இதை வாங்கலாம். Kindle Fire என்பது சாதாரண ஆன்டிராய்டு டேப்லட்தான். இதற்குப் பதில், Apple ipad, Samsung, Nexus டேப்லட்களே மேல். ஆனால் கவனச் சிதறல், குறைந்த பேட்டரியுடனே வாழ வேண்டும்.

புது முயற்சிகள்


Newshunt எனும் நிறுவனம் மொபைல் செயலி உருவாக்கி, பல இந்திய மொழிகளில் குறைந்த விலையில் மின்னூல்களை விற்று வருகிறது. Pratilipi.com இப்போது இணையதளமாக மட்டும் செயல்படுகிறது. விரைவில் செயலியாகவும் வர இருக்கிறது.

இவை தவிர scribd.com, issuu.com போன்ற பல தளங்களும் மின்னூல்களை விற்பனை செய்கின்றன. இவை DRM உடன் வருவதாலும், ஆன்டிராய்டு, ஐஓஎஸ் -இல் மட்டுமே கிடைப்பதாலும், என் போன்ற E-Ink திரைக் காதலர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை.

புதுக் கருவி வாங்கும் முன் ebay.co.in, olx.in போன்ற தளங்களிலும், சென்னை ரிச் தெரு போன்ற சந்தைகளிலும் தேடி, பழைய கருவிகள் கிடைத்தால், வாங்கலாம்.

நண்பரிடம் இரவல் வாங்கியாவது, ஒரு முறை E-Ink திரையில் ஒரு புத்தகம் படித்துப் பாருங்கள். உங்கள் கண்கள் உங்களுக்கு நன்றி சொல்வதை உணர்வீர்கள்.



••••••••

மலைகள் இதழ் 78 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7005

தெரிந்ததை எழுதுங்கள்

எழுத்து. மனித இனம் தான் பெற்ற அறிவை, பிறருக்கு தருவதற்காகக் கண்டுபிடித்த ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு. ஒலியானது வரி வடிவம் பெற்ற பின்புதான், தலைமுறைகளைத் தாண்டி வாழும் சிறப்பு பெற்றது. இயல்பாகவே மனிதருக்கு தாம் அறிந்தவற்றை பிறருக்கும் தரும் பரந்தமனம் உள்ளது. அதன் வெளிப்பாடுகளே இன்றும் நாம் படித்த புத்தகம், பார்த்த திரைப்படம், கேட்ட பாடல் போன்றவை பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வழக்கம்.

பனை ஓலை காலங்களைத் தாண்டி, காகித வடிவம் பெற்றதுமே, உலகினில் பெரும் அறிவுப் புரட்சி ஏற்பட்டது. உலகின் எல்லா அரசியல் புரட்சிகளுக்குப் பின்னும் சிறந்த எழுத்தாளர்களும், புத்தகங்களுமே இருந்து வருகின்றன. தமிழிலும் எல்லா அறிவுகளும் புத்தகவடிவில் கிடைத்து வந்தன. போனதலைமுறை வரை.

சங்ககால இலக்கியங்கள், நீதி நூல்கள், புராணங்கள், சோதிட, வானியல் நூல்கள், சித்தமருத்துவம், விவசாயம், ஆன்மீகம், சிறுதொழில்கள் என பல்வேறு துறையினரும் தம் துறைசார் படைப்புகளை உருவாக்கி, நூல்களாக வெளியிட்டு வந்தனர். ரேடியோ ரிப்பேர் செய்வது முதல் நீச்சல், வீணை, காதல் வரை அனைத்தையும் சொல்லித்தரும் நூல்கள் பெருமளவில் வந்தன. எங்கோ உள்ள ரஷ்யாவில் எழுதப்பட்ட பல்வேறு உயர்தர அறிவியல் நூல்கள், மிர் பதிப்பகத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டு, எல்லா சிற்றூர்களின் கிளை நூலகங்களையும் சென்று அடைந்தன.

உலக அரசியல் முதல் உள்ளூர் கண்டுபிடிப்புகள் வரை அனைத்தையும் தமிழிலேயே பெறச் செய்தனர் போன தலைமுறையினர். ஆனால் இன்றைய இளைய இணைய தலைமுறைக்கு, இணையத்தில் கிடைப்பது என்ன?

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்லூரி மாணவரிடம் பேசிய போது, சில அதிர்ச்சியான உண்மைகளை அறிந்தேன்.
‘நான் ஏன் தமிழைக் கற்றுக் கொள்ளவேண்டும்? உலக அறிவு அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. என் அறிவுத் தேவைகளை தமிழ் தீர்ப்பதில்லை. நூலகங்களில் குவிந்து கிடக்கும் போன தலைமுறை நூல்கள் இணையவாசிகளான எங்களுக்கு கிடைப்பதும் இல்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழருக்கு அவை என்றும் கிடைக்கப் போவதே இல்லை.’

‘இணையத்தில் இல்லாத எந்த ஒரு விஷயமும் எங்களைப் பொறுத்தவரை இல்லவே இல்லை தான். எளிதில் பெற இயலாமல் எங்கோ ஏழு கடல், ஏழு மலை தாண்டி, நூலகங்களிலும், புத்தகக்கடைகளிலும் ஒளிந்து கிடைக்கும் அறிவைப் பெற இங்கு தேவை மிகவும் குறைவு. அறிவியல், இலக்கிய ஆய்வு செய்வோர் இவற்றை தேடி எடுத்து அவற்றை நுகர முடியும். இன்றைய நவீனத் தேவைகளுக்கு, தேடுபொறியில் தேடி கிடைப்பவை மட்டுமே மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.’

‘உண்மைதான். ஆனாலும் இப்போது தமிழில் நிறையபேர் எழுதுகிறார்களே.!’

‘ஆம். இணையத்தில் இப்போது எழுதுபவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் சினிமா. அரசியல். இவற்றிலும் இவர்கள் சாதிச் சண்டைகள், சினிமா கதாநாயகரைத் தொழும் அடிமைத்தனங்களே அதிகம். கொஞ்சம் இலக்கியம் வகையான கவிதைகள், சிறுகதைகள், தொடர்கள். அறிவு சார்ந்து எழுதுபவர்கள் 1 அல்லது 2 சதம் மட்டுமே. எங்கே தமிழில் ஒரு கணிணியை Assemble செய்வது பற்றியோ, ஒரு பைக் டயருக்கு பங்சர் ஒட்டுவது பற்றியோ, இணையவழியில் ஒரு சினிமா டிக்கட் பதிவு செய்வது பற்றியோ தேடிப் பாருங்களேன். ஒன்றுமே கிடைக்காது. கணிதம், அறிவியல் போன்றவற்றுக்கு பள்ளிப் பாடநூல்கள் தவிர, அவற்றை விளையாட்டாக சொல்லித் தரும் ஒரு தளமும் இல்லை. பல்லாயிரம் கைத்தொழில்களும் குலத்தொழில்களும் அழிந்து வரும் இந்த நிலையில் அவற்றைத் தமிழில் ஆவணப் படுத்த எவரும் இல்லை.’

‘டிரான்சிஸ்டர் காலத்தில், அவற்றை நாமே உருவாக்கவும், அடிப்படைகளைப் புரிந்து கொள்ளவும், பழுது பார்க்கவும், பல புத்தகங்கள் தமிழில் வந்திருக்கின்றன. இப்போது Raspberri Pi, Arduino காலத்தில் ஏன் அவை பற்றி தமிழில் இல்லை? அட ஒரு நல்ல ஸ்மார்ட் போன், மடிக்கணிணி, மின்சாரகுக்கர், வாஷிங் மெஷின், மிக்ஸி வாங்க, அவற்றின் நிறை குறைகளை அலசும் தளம் கூடஇல்லையே. இவை எளிய தேவைகள். பல்வேறு மென்பொருட்கள், கணிணி மொழிகள், நோய்கள், மருத்துவ ஆலோசனைகள், பொருளாதாரம், வணிகம், மார்க்கெட்டிங் என துறைசார்ந்த அறிவு எதுவும் தமிழில் பதியப் படுவதில்லையே.’

‘ஆம். பட்டு சேலைகள் நெய்வது எப்படி? என்று தேடினால் எதுவும் கிடைப்பதில்லை. “How to weave silk saree?” என்று தேடினால் பல வீடியோக்களும் இணையதளங்களும் கொட்டிக் கிடக்கின்றன. காலம் காலமாக பட்டு நெசவு செய்யும் எமது காஞ்சிபுரம் மக்கள் ஒருவர் கூட தமிழில் தம் தொழிலையும், திறமையையும், அறிவையும் பகிராதது வருத்தமே.’

‘இவ்வாறு அறிவு சார் விஷயங்கள் மிகக் குறைவாகக் கிடைக்கும் மொழி இன்னும் எத்தனை தலைமுறைகள் தாண்டும்? ‘ தக்கன தழைக்கும் ‘ என்ற டார்வின் விதி மொழிக்கும் பொருந்தும். தமிழில் அறிவைப் பெற இயலாதபோது, ஏன் அதைப் பயன்படுத்தவேண்டும்? கற்கவேண்டும்?’

‘என்னதான் இருந்தாலும் தமிழ் நம் தாய்மொழி அல்லவா? அதைக் கற்காமல் விடலாமா?’

‘ஹாஹாஹா. என் மம்மி, டாடிதான் தமிழர். ஆனால் என் தாய்மொழி ஆங்கிலம். என் மம்மி, டாடி வீட்டில் என்னிடம் ஆங்கிலம்தான் பேசினர். பள்ளியிலும் அதேதான். என் சொந்த ஆர்வத்தில்தான் ஓரளவு தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன். தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தமிழில் அறிவூட்டும் இணையதளங்கள் இல்லாதபோது, தமிழைப் பயன்படுத்துவது பெரிதும் குறைகிறது. என்னளவில் பேச்சு மொழியாக மட்டும் இருந்து விட்டு, என் பிள்ளைகளிடம் போய்ச் சேருவது கடினமே.’

உண்மைதானே. கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே, முன் தோன்றிய தமிழ், ஒவ்வொரு தலைமுறையினரும் செய்த பங்களிப்புகளால் மட்டுமே அடுத்த தலைமுறைக்குச் சென்றது. இதன் பல்வேறு இலக்கியச் செல்வங்கள் மட்டுமே இந்ததலைமுறைக்குப் போதுமானதல்ல. நூற்றாண்டுகள் பழமையான மொழி, நம் தலைமுறையினர் தம் அறிவைப் பகிராமல் போவதால், அழிந்து போனால், அது மிகவும் சோகமானது.

வாருங்கள். நமக்குத் தெரிந்த யாவற்றையும் தமிழில் எழுதுவோம். WordPress.com, blogger.com, medium.com என அட்டகாசமான வலைப்பதிவுகள் உள்ளன. தமிழில் எழுத உதவும் மென்பொருட்களும் நிறைய உள்ளன. உங்கள் மொபைலில் கூட தமிழில் வலைப்பதிவு எழுதலாம். விக்கிப்பீடியாவும் அறிவைப் பகிர ஒரு சிறந்த தளம்.

ஆங்கிலத்தில் கிடைக்கும் அறிவுச் செல்வங்கள் யாவும் துறைசார் வல்லுனர்களால் மட்டுமே எழுதப்படுவது அல்ல. தம் அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சாமானியர்களால் மட்டுமே ஆ்ங்கிலத்தில் எல்லா அறிவுகளும் கிடைக்கின்றன. எனவே, தமது புலமை, திறமை பற்றி ஐயம் கொள்ளாமல், நமக்குத் தெரிந்தை, தெரிந்த வரையில் தமிழில் பகிரலாமே.

இலக்கியம், சினிமா, அரசியல் பற்றி எழுதுவோருக்கு இருக்கும் அதே ஆர்வமுடன் பிறதுறைகளிலும் எழுதத் தொடங்கினால் , தமிழ்த்தாயின் ஆயுள் கூடும்.
போன தலைமுறை தம் அறிவைப் பகிர புத்தகங்கள் உருவாக்க எவ்வளவு கஷ்டப் பட்டார்கள் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.

http://www.dailymotion.com/video/x2tvgff_pretty-sure-you-can-t-do-this-to-a-kindle_lifestyle


நமக்கு அப்படியெல்லாம் இல்லை. சும்மா, தட்டச்சினாலே போதும்.
சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் தட்டச்சுப் பழக்கம்.

அட. தட்டச்சு கடினம் என நினைத்தால், எடுங்கள் உங்கள் மொபைல் போனை. உங்கள் துறை சார் விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து YouTube.com போன்ற தளங்களில் வெளியிடுங்கள். மென்பொருள் பாடங்கள், பைக் ரிப்பேர், புது மொபைல் போன் அறிமுகம், வேட்டி, சேலை நெய்தல், மர வேலை, வீடு கட்டுதல், தோட்டம் அமைத்தல், போன், மோட்டார் பழுது பார்த்தல், நடனம், உடற்பயிற்சி, விளையாட்டு என உங்களுக்குத் தெரியும் அனைத்தையும் தமிழில் பேசி, பதிவு செய்து வெளியிடுங்கள்.

இணையத்தில் இல்லாத எதுவும் இல்லை என்றே ஆகிவிடும்.

நம்மிடம் இருக்கும் வெள்ளித் தட்டில், போன வாரம் என்ன உணவு இருந்தது என்பது முக்கியம். அதைவிட இப்போது என்ன உணவு இருக்கிறது என்பதே நம் உயிரின் தேவை. மொழிக்கும் அதேதான்.

நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா நமக்குத் தந்ததை விட இன்னும் அதிகமாக நம் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் தரலாம் வாருங்கள்.
பின்குறிப்பு -

கணிணி பற்றி தமிழில் அறிய – http://kaniyam.com
தமிழில் புகைப்படக்கலை – http://photography-in-tamil.blogspot.co.in
தமிழில் பங்கு வணிகம் – https://kaalaiyumkaradiyum.wordpress.com/

இது போல உங்களுக்குத் தெரிந்த துறைசார் தளங்கள் பற்றிய விவரங்களை பின்னூட்டமாகத் தரலாமே.

••

பின்குறிப்பு

முகநூல் வருகைக்குப் பின், வலைப்பதிவுகள் குறைந்து விட்டன. இது மிகப் பெரும் இழப்பு. வலைப்பதிவுகளில் எழுதுபவை மட்டுமே இணையத் தேடுபொறிகளில் கண்களில் கிடைப்பவை. முகநூலில் நீங்கள் எழுதுபவற்றை, உங்களாலேயே கூட தேடி எடுக்க இயலாது. தேடுபொறிகளிலும் கிடைக்காது. எனவே, முகநூலில் மட்டும் எழுதி, உங்கள் எழுத்துகளை ஒரு மாபெரும் பாழும் கிணற்றில் எறிந்து
விடாதீர். வலைப்பதிவாகவும் உங்கள் எழுத்துகளை சேமித்து வாருங்கள்.

••••••••••


மலைகள் இதழ் 77 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=6928

பொய்களைப் பரப்பாதீர்கள்


உண்மையை விட பொய்களே அதிகமாகவும் விரைவாகவும் மக்களிடையே பரவுகின்றன.

இணையம் இல்லாத காலங்களில், எனக்குப் பல தபால் அட்டைகள் வந்தன. ஒரு கோயிலில் நடந்த அதிசயத்தை விளக்கி, அதை 100 பேருக்கு அனுப்ப வேண்டும். அனுப்பவில்லையெனில் தீங்கு ஏற்படும் என்றும் பயமுறுத்துவர்.

பின்னர், மின்னஞ்சல் வந்த போது, பல வங்கிகளின் போலி வலைத் தளங்கள், கடவுச்சொல் கேட்டு மின்னஞ்சல்கள் வந்தன. ஆப்பிரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் தமது சொத்துகளுக்கு நம்மை வாரிசாக அறிவிக்க அனுமதி கேட்டு மின்னஞ்சல் அனுப்புவர். வெளிநாட்டு வேலை, போலி சுற்றுலா அழைப்புகள் என பல்வேறு பொய்கள் பரவின.

இப்போது முகநூலும், வாட்சப் போன்ற செயலிகளும் செய்திகளைப் பரப்புவதில் பெரும்பங்கு வகிக்கின்றன, பெருமழை போன்ற சிக்கலான நேரங்களில் மக்களை ஒருங்கிணைத்ததில் இவற்றின் சேவை மிகவும் போற்றத் தக்கது. அவசியமான தகவல்களைப் பகிர்ந்து பல உயிர்களைக் காத்துள்ளன.

பிற நேரங்களில், செய்திகளைப் பகிர்வதில் மக்களைக்கு உள்ள ஆர்வம், அவை உண்மையா, பொய்யா என ஆய்வதில் இருப்பதில்லை. எது கிடைத்தாலும் உடனே பகிர வேண்டும் என்று பலருக்கும் கை அரிக்கும் என நினைக்கிறேன். இது மிகவும் மோசமான ஒரு மனநிலை. பல செய்திகளைப் பார்க்கும் போது, மக்களுக்கு மண்டையில் மூளையும் யோசிக்கும் திறனும் இருக்கிறதா என்றே சந்தேகம் வந்து
விடுகிறது.

சில உதாரணங்களைக் காண்போம்.

1. வாகன ஆவணங்கள்

உங்களிடம் வாகன ஆவணங்கள் இல்லாமல், போக்குவரத்துக் காவலரிடம் மாட்டிக் கொண்டால், அவரிடம் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 15 நாட்களில்
நீதிமன்றத்தில் ஆவணங்களைக் காட்டினால் போதும்.

இது பற்றி எனது காவல் துறை நண்பர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள். இரு வாரங்களில் நீதிமன்றத்தில் ஆவணங்களைக் காட்டலாம். ஆனால் அதுவரை வண்டி காவல் நிலையத்தில் தான் இருக்கும். இந்தத் தகவல் யாருக்கும் தெரிவதில்லை. அரைகுறை செய்திகளை மட்டும் தெரிந்துகொண்டு, போக்குவரத்துக் காவலரிடம் உங்கள் சட்ட அறிவை நிரூபிக்க வேண்டாம். காவலர் வண்டியைக் கொண்டு சென்ற பின், அதன் சேதாரத்திற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

சாலைவிதிகளைப் பின்பற்றுவதும் வண்டி ஆவணங்களை வைத்திருப்பதும் நமது கடமை. அதை மீறிவிட்டு, பின் கட்டணம் செலுத்தும்போது அதற்கான சட்டங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். அரைகுறை செய்திகளைப் பரப்பாதீர்கள்.

2. ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தையின் படம்

இதைப் பகிர்ந்தால் வாட்சப் நிறுவனம், குழந்தையின் பெற்றோருக்கு, ஒவ்வொரு பகிர்வுக்கும் 1 ரூபாய் அளிக்கும்.

வாட்சப்பில் 700 மில்லியன் பயனர்கள் ஒரு நாளில் 30 மில்லியன்  செய்திகளைப் பகிர்கின்றனர். ஒரு படத்தைப் பகிரும் செயலால், வாட்சப் நிறுவனம், எப்படி, ஏன் பணம் தர இயலும்? பெரும் தொண்டு நிறுவனங்களால் கூட இப்படி செய்ய இயலாதே. கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்களா?

3. அஜித் குமார் 100 MB data pack இலவசமாத் தருகிறார்

இதைவிட அவருக்கு வேறு வேலை இல்லை பாருங்கள். யாரோ கோமாளி ஒருவர் கிளப்பிய புரளியை, முட்டாள்கள் பலரும் பகிர்கின்றனர்.

4. திருநள்ளாறு சனி பகவான் கோயில் மகிமை

இந்தக் கோயிலின் மேலே செயற்கைக் கோள்கள் சில நிமிடங்கள் செயலிழந்து விடுகின்றனவாம். நாசாவே கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அற்புதமாம். நாசாவின் இணையதளத்தில் இது பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை. இவ்வாறு நாசாவுக்கே தெரியாத செய்திகளை அறிந்து மக்களிடையே பரப்பிய அதி புத்திசாலி யார் என்று தெரியவில்லை.

••••••••

இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இவை போல, பல நூறு பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன. யாரோ ஒரு சில புத்திசாலிகள், சிரித்துக் கொண்டே உருவாக்கும் பொய்ச் செய்திகள், பல்லாயிரம் மக்களை முழு முட்டாள்கள் என நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன.

எது கிடைத்தாலும் உடனே பகிரும் மனநோய் மக்களுக்கு இருக்கும் வரை, இது தொடரும்.

நீங்களும் இதுவரை முட்டாளாக இருந்திருக்கலாம். இனியாவது எதையும் பகிரும் முன் சற்று யோசியுங்கள். செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி தேடத் தொடங்குங்கள். கைக்குள்ளேயே இணையம் வந்து விட்ட பின்பும், தேடுவதற்கும் உண்மையை ஆய்வதற்கும் சோம்பல் கொண்டு முட்டாளாகி விடாதீர்கள்.

நல்ல மூளையும், யோசிக்கும் திறனும் பெற்ற முழு மனிதராக மாற இன்றே முடிவு எடுங்கள்.

••••••••

மலைகள் இதழ் 88 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7666