Tuesday, January 30, 2018

போய் வாருங்கள் கோபி



நேற்று தகடூர் கோபி (higopi) காலமானார்.

42 வயதே ஆனவர். மாரடைப்பு வரும் வயதே அல்ல.

நான் கணினி கற்க முயன்ற காலத்தில், தமிழையும் ஒருங்குறி எழுத்துருக்களையும் கணினிக்கு அறிமுகம் செய்தவர்களில் இவரும் ஒருவர். பல்வேறு குறிமுறைகள் இருந்த காலத்தில், அவற்றுக்கு ஒருங்குறி மாற்றியைத் தந்தவர்.

பெரும் கணினிப் பேராசிரியர்களும் நிறுவனங்களும் மட்டுமே தமிழ்க்கணிமைக்குப் பங்களித்த போது, கணினி நிரலாக்கம் கற்ற எவரும் தமிழ்க்கணிமைக்குப் பங்களிக்கலாம் என்ற ஆர்வத்தை உருவாக்கியவர்.

பட்டாம்பூச்சி விளைவின் படி, எனக்கு தமிழ்க்கணிமையில் ஆர்வம் வரவும், சிறு முயற்சிகளான கணியம், FreeTamilEbooks.com, விக்கி பங்களிப்புகள் போன்றவற்றுக்கு ஆதாரமானவர்களில் இவரும், இவரது முயற்சிகளும் முக்கியமானவை.

என் தம்பி அருளாளன் உருவாக்கிய ஒருங்குறி மாற்றி, இவரது மாற்றியையும் அடிப்படையாகக் கொண்டது.

இது போல, இவரிடம் ஏகலைவனாகக் கற்றவர் பலரும் இருப்பர்.

எனது நண்பர்கள் இரவிசங்கர், செல்வமுரளி, உதயன், ஆமாச்சு எனப் பலருக்கும் நெருங்கிய நட்பில் இருந்தவர். நான் மிகவும் தாமதமாக தமிழார்வம் கொண்டதால், பழகத் தவறவிட்டவர்களில் இவரும் ஒருவர்.

மாரடைப்பும் சர்க்கரை வியாதியும் இளவயதினருக்கும் வருவது இயல்பாகி விட்டது.
எல்லா இலையும் ஒருநாள் உதிர்ந்தே தீரும். ஆனால் இலை பழுத்து உதிர்வதே இயற்கை.
முதிரும் முன் உதிரும் இலைகள், நமக்கு போதிப்பது என்ன?
  • உடல் நலம் பேணுக.
  • குடும்பத்தினருக்கு போதிய நேரம் தருக.
  • வேலை மட்டுமல்ல வாழ்க்கை.
  • போதிய உறக்கமும், நல்ல உணவும், உடற்பயிற்சியும், உடல் நலமும் பெற ஆவன செய்க.
  • வருட வருமானத்தை விட 10-20 மடங்காவது பணம் தரும் டெர்ம் பிளான் எனும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேருக. (நாம் இல்லாமல் போனாலும், குடும்பத்திற்கு வருவாய் தரும் வழிகளில் இதுவும் ஒன்று )
இவை எனக்கே நான் போதித்துக் கொள்பவை.

இவற்றை என் நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன்.

வேறென்ன? வெறுமையாய் உள்ளது மனம்.

போய் வாருங்கள் கோபி! உங்கள் தமிழ்த் தொண்டுகள் என்றும் ஏகலைவன்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.

– த. சீனிவாசன்

தகடூர் கோபியைப்பற்றி அறிய, பேரா. மு. இளங்கோவன் அவர்கள் எழுதிய வலைப்பதிவு இங்கே உள்ளது.
muelangovan.blogspot.in/2009/01/blog-post_11.html